அயோத்தியின் தானிப்பூரில் மசூதிக்கான இடத்தில் பொதுமக்கள் வசதிக்கான கட்டிடங்கள் கட்டப்படும்போது அடிக்கல் நாட்ட, முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைக்கப்படுவார் என்று சன்னி மத்திய வக்பு வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை கடந்த 5-ம் தேதி நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கு ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உ.பி. முதல்வர் ஆதித்யநாத் நிருபர்களுக்குப் பேட்டி அளி்த்தார்.
அப்போது முதல்வர் யோகியிடம் உபி முதல்வராக ராமர் கோயிலின் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டது போல், மசூதி கட்டப்பட்டால் அந்த நிகழ்ச்சிக்கும் செல்வீர்களா?’ என கேட்டனர்.
அப்போது உபி முதல்வர் யோகி கூறும்போது, ‘எனது பணியை நான் எப்போதும் செய்து கொண்டிருப்பேன். யோகி ஒரு இந்து என்ற அடிப்படையில் மசூதிக்கு நான் செல்ல முடியாது என்னுடைய மதக்கோட்பாடுகளை நான் பின்பற்றுவேன்.
ஆனால் முதல்வராக என்னை அழைத்தால், எந்த மதம், நம்பிக்கை, சமூகம் எனப் பார்க்கமாட்டேன் அங்கு செல்வேன். ஆனால், மசூதியின் அடிக்கல்நாட்டு விழாவிற்கு என்னை எவரும் அழைக்க மாட்டார்கள், நான் அதற்கு செல்லவும் மாட்டேன்.’ எனத் தெரிவித்தார்.
முதல்வர் ஆதித்யநாத் மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்குச் செல்லமாட்டேன் என்று தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்த சமாஜ்வாதிக் கட்சி மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டிக்கொள்வதர்காக அயோத்தி அருகே இருக்கும் தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலத்துக்கான ஆவணங்களை அயோத்தி மாவட்ட ஆட்சியர் சன்னி வக்பு வாரியத்திடம் கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்படைத்தார்.
இந்நிலையில் சன்னி வக்பு வாரியத்தின் உறுப்பினரும், இந்திய இஸ்லாமிய கலாச்சார அமைப்பின் செயலாளருமான அதார் ஹூசைன் பிடிஐ நிருபருக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது மசூதி அடிக்கல் நாட்டுவிழாவுக்கு முதல்வர் ஆதித்யநாத் அழைக்கப்படுவாரா என்று கேட்டனர்.
அதற்கு ஹூசைன் பதில் அளிக்கையில், “ தானிப்பூரில் 5 ஏக்கர் நிலத்தில் ஒரு மருத்துவமனை, நூலகம், சமூக உணவுக்கூடம், ஆய்வு மையம் போன்றவை கட்டப்பட உள்ளது. இது மக்களுக்காக மசூதி இடத்தில் கட்டப்படும் கட்டிடம். இந்த தி்ட்டங்களுக்கு அடிக்கல்நாட்ட ஆதி்த்யநாத் அழைக்கப்படுவார்.
இந்த நிகழ்ச்சியில் மட்டும் முதல்வர் யோகி பங்கேற்காமல், திட்டங்களுக்கு உதவியும் செய்வார் என நம்புகிறோம், ஏனென்றால், இது முழுக்க மக்களின் பயன்பாட்டுக்காக கட்டுகிறோம். இந்தக் கட்டிடங்களுக்கு இதுவரை எந்த பெயரும் சூட்டப்பட திட்டமிடப்படவில்லை.
எங்களுக்கு அளிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டுவதற்காக அடுத்த 10 நாட்களில் ஒரு அறக்கட்டளையை லக்னோவில் உருவாக்க இருக்கிறோம். இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பான் எண்ணுக்கும் பெற்றுவிட்டோம். விரைவில் வங்கிக்கணக்கு தொடங்கி அறக்கட்டளை தொடங்கப்படும். அடுத்த 10 நாட்களில் பணிகள் முடிந்து அறக்கட்டளை செயல்படத்தொடங்கும்.
இந்த அறக்கட்டளையில் மொத்தம் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் 9 பேர் பெயர் முடிவு செய்யப்பட்டது, 6 பேர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago