கேரளாவில் பெற்ற குழந்தைகள் முன்பு தாய் கூட்டு பலாத்காரம்: கணவர் உள்பட நண்பர்கள் 6 பேர் கைது: கேரள மகளிர் ஆணையம் நோட்டீஸ்

By பிடிஐ

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, இளம்பெண்ணை அவரின் மகன்கள் முன் கணவர் உள்பட அவரின் நண்பர்கள் 6 பேர் கூட்டு பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மகளிர் ஆணையம் திருவனந்தபுரம் போலீஸார் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொன்ற விவகாரத்தில் கேரள மாநிலத்தின் நற்பெயருக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து அதன் பெயரை மேலும் கெடுக்கும் விதமாக அமைந்துள்ளது. இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது. சமூக ஊடங்களில் பெரும் கண்டனம் எழுந்து குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

''திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 25 வயதுப் பெண் அவரின் 5 வயது மகனையும், 3 வயது மகனையும் அவரின் கணவர் திருவனந்தபுரம் கடற்கரை அருகே இருக்கும் புதுக்குறிச்சி எனும் கடற்கரை கிராமத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு கடந்த வியாழக்கிழமை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, அடித்துக் கொடுமைப்படுத்தி, அந்தப் பெண்ணின் கணவரும், அவரின் நண்பர்கள் 6 பேரும் அந்தப் பெண்ணின் பிள்ளைகள் முன்பு கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்தப் பெண்ணின் உடலில் சிகரெட்டால் சுட்டுக் காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அந்தப் பெண் நினைவில்லாமல் மயங்கியதால் அங்கிருந்து அனைவரும் சென்றுள்ளனர். நினைவு திரும்பிய அந்தப் பெண் அரைகுறை ஆடைகளுடன் சாலையில் வந்து ஒரு இளைஞரிடம் கண்ணீர் விட்டு உதவி கோரியுள்ளார்.

அந்த இளைஞர் காரில் அந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, உடைகளைக் கொடுத்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். ஊடகங்களுக்கும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பலாத்காரம், கடத்தல், கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும், குழந்தைகள் முன் தவறாக நடந்ததால், போக்சோ சட்டப்படியும் அந்தப் பெண்ணின் கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் போலீஸ் எஸ்பி பிறப்பித்த உத்தரவில், தனிப்படை அமைத்துத் தேடியதில் அந்தப் பெண்ணின் கணவர் உள்பட அவரின் நண்பர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் ஒருவரைத் தேடி வருகிறோம்''.

இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மகளிர் ஆணையத்தின் தலைவர் எம்.சி. ஜோஸபைன், இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்ய திருவனந்தபுரம் ஊரக போலீஸ் எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். அவர் கூறுகையில். “ அந்தப் பெண்ணை குழந்தைகள் முன் பலாத்காரம் செய்த கொடூரமான மனம் கொண்ட அனைவரின் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்