அரசு தனிமை மையக் குறைகளைச் சுட்டிக்காட்டியவரை அதிகாரிகள் பெல்ட்டால் அடித்ததாகப் புகார்  : மத்திய அமைச்சர் காட்டம்

By ஏஎன்ஐ

சத்திஸ்கர் மாநிலத்தில் அரசு கரோனா தனிமை மையத்தின் மோசமான நிலையைச் சுட்டிக்காட்டியவர்களை அதிகாரிகள் பெல்ட்டால் அடித்ததாக எழுந்த புகார்கள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து மத்திய பழங்குடி விவகார இணை அமைச்சர் ரேணுகா சிங் கோபாவேசமடைந்து அதிகாரிகளை நோக்கி சத்தம் போட்டது வீடியோவில் வெளியாகியுள்ளது. சத்திஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சிபுரிவது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்பிரிவில் இருந்த திலிப் குப்தா என்பவர் பல்ராம்பூர் தனிமை மையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று விமர்சனங்களை வைக்க அவரை தலைமைச் செயலதிகாரி வினய் குப்தா மற்றும் மாவட்ட தாசில்தார் ஷதாப் கான் இருவரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். திலிப் குப்தா டெல்லியிலிருந்து வந்ததால் தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரேணுகா சிங் ஏ.என்.ஐ. செய்தி ஏஜென்சிக்குக் கூறும்போது, “பல்ராம்பூர் அரசு தனிமை மையத்தில் மோசமான நிர்வாகம் மோசமான வசதிகள் குறித்து திலிப் குப்தா புகார் எழுப்பியதோடு அந்த நிலமைகளை வீடியோ பிடித்தார். நிர்வாகம் இந்த வீடியோ விவகாரத்தினால் ஆத்திரமடைந்தது.

உடனே தாசில்தார் மற்றும் ஜன்பத் பஞ்சாயத்து சி.இ.ஓ. சேர்ந்து அவரை பெல்ட்டால் அடித்துள்ளனர். மேலும் அவரை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர், திலிப் குப்தாவின் குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர். பிற்பாடு அவரது பெற்றோர் என் கவனத்திற்கு விஷயத்தைக் கொண்டு வர, நான் தனிமை மையத்தை வந்தடைந்த போது திலிப் குப்தா மோசமாகத் தாக்கப்பட்டதைக் கண்டேன், நான் கண்.டித்தவுடன் அதிகாரி தன் தவறை ஒப்புக் கொண்டார்.” என்று தெரிவித்தார்.

மேலும் வீடியோவில் அமைச்சர், “நீங்கள் ஏன் அவரை அடித்தீர்கள் என்றால் அவருக்கு அவரது உரிமைகள் தெரிந்திருக்கிறது என்பதால்தானே. இது உதவாது. என் பகுதி மக்களுக்கு அநீதி இழைப்பதை என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.” என்று பதிவாகியுள்ளது.

மேலும் அமைச்சர் ரேணுகா சிங், சத்திஸ்கர் அரசு அனைத்தையும் மறைக்கிறது என்று சாடினார், மேலும் “பாஜக தொண்டர்களை பலவீனமானவர்கள் என்று கருத வேண்டாம். அறையில் அடைத்து வைத்து எப்படி பெல்ட்டால் அடிப்பது என்பது எங்களுக்கும் தெரியும்.” என்று அதிகாரிகளிடம் கர்ஜித்ததும் பதிவாகியுள்ளது.

தாசில்தான் சதாப்கான் மறுப்பு:

திலிப் குப்தாவைத் தாக்கவில்லை, இது தவறான செய்தி, அவர் புகாரை விசாரிக்கவே நான் மையத்துக்கு வந்தேன். ஆனால் ஒரு அமைச்சர் என்ன மாதிரியான வார்த்தைகளை பேச வேண்டும் என்பதை அவர் விருப்பத்துக்கு விட்டு விடுகிறேன்” என்றார். மாவட்ட சி.இ.ஓ.வும் தனிமை மையத்தில் இருப்பவரை தொடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, அமைச்சரின் வார்த்தைகள் எங்கள் உணர்வையே பாதித்து விட்டது. ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் பேசலாமா..என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

41 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்