கரோனா விழிப்புணர்வு: உ.பி. போலீஸாரே நடித்து வெளியிட்ட ஆவணப்படம் 

By ஆர்.ஷபிமுன்னா

கரோனா விழிப்புணர்விற்காக உத்தரப் பிரதேச காவல்துறையினரே நடித்த ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. சஹரான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் (எஸ்பி) தமிழருமான பி.தினேஷ்குமார் ஐபிஎஸ் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள சஹரான்பூரில் இதுவரை 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஊரடங்கை இங்குள்ள பொதுமக்கள் கடைப்பிடிப்பது பெரும் சவாலாக உள்ளது.

இதற்காக ஊரடங்கை மீறுபவர்கள் மீது மாவட்டக் காவல்துறையின் சட்டப்படியான நடவடிக்கைகளும் தொடர்கின்றன. இத்துடன் பொதுமக்களுக்கு கரோனா மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த எஸ்.பி. தினேஷ்குமார் வெளியிட்ட ஆவணப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுபோன்ற ஆவணப்படத் தயாரிப்புகள் முதலில் கேரள மாநிலக் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டன. இதையடுத்து தமிழகம், ஆந்திரா எனப் பல மாநிலங்களும் அம்முறையைப் பின்பற்றின.

எனினும், உ.பி.யின் சஹரான்பூரில் வெளியான ஆவணப்படத்தில் முக்கியத்துவம் அளிக்க அம்மாவட்டக் காவல்துறையினரே நடித்துள்ளனர். ஏற்கெனவே பொதுமக்கள் இடையே நன்கு அறிமுகமான காவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்களது நடிப்பில் உருவான ஆவணப்படம் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் சில காட்சிகளில் எஸ்.பி. தினேஷ்குமார், ஐஜி, டிஐஜியும் தோன்றி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். இந்தி மொழியிலான இப்படத்தின் சில வசனங்கள் சஹரான்பூர்வாசிகள் இடையே பிரபலமாகி வருகின்றன.

தினேஷ்குமார்

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’இணையத்திடம் சஹரான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார் கூறும்போது, ''பொதுமக்களின் கவனத்தைக் கவர வேண்டி மிகவும் சிரமத்துடன் கவனமாக ஆவணப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக எங்கள் உயர் அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளித்தது போலீஸாரையும் உற்சாகப்படுத்தியுள்ளது'' எனத் தெரிவித்தார்.

உ.பி. மாநிலக் காவல்துறை சார்பில் கரோனா பாதுகாப்பு நிதியாக ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பொதுமக்களுக்கான வேண்டுகோள் காட்சிகளும் ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆயிரக்கணக்கான மதரஸாக்கள் அமைந்துள்ள சஹரான்பூரில் முஸ்லிம் சமூகத்தின் மக்கள்தொகை அதிகம். இந்த மதரஸாக்களின் மவுலானாக்களிடமும் ஐபிஎஸ் அதிகாரியான தினேஷ்குமார், கரோனா மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தனிப்பட்ட முறையிலும் பேசி வலியுறுத்தி வருகிறார்.

லாரி மோதி உ.பி. காவலர் பலி

இதனிடையே, டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் உ.பி. காவலரான ரிஷப் (27) பலியானார். நொய்டாவின் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலைப் பணியில் ஊரடங்கை மீறுபவர்கள் மீதான கண்காணிப்பில் இருந்தவர் மீது லாரி மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்