கரோனாவை வெல்லும் கேரளா; ஒருவருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று; 218 பேர் குணமடைந்தனர்: பாதிப்பு குறைகிறது

By பிடிஐ

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் நேற்று ஒரே ஒருவர் மட்டுமே தொற்றுடன் அனுமதிக்கப்பட்டார். 17 பேர் குணமடைந்து சென்றனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக தொற்று நோயாளிகள் குணமடைந்து சென்ற விகிதத்தில் கேரள மாநிலமே முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை 218 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 167 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஜனவரி 30-ம் தேதி முதன் முதலாக நாட்டிலேயே முதல் கோவிட்-19 நோயாளி கேரள மாநிலத்தில்தான் அடையாளம் காணப்பட்டார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து வந்த மாணவி ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டநிலையில் அதன்பின் வெளிநாடுகளில் இருந்து கேரள மக்கள் தொடர்ந்து வந்தவாறு இருந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்தது, இதில் 218 பேர் தற்போது குணமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''கேரள மாநிலத்தில் படிப்படியாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வரும் நாட்களில் இன்னும் விதிமுறைகளை தீவிரமாக்கி, லாக் டவுன் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவோம்.

நாட்டிலேயே குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் கேரள மாநிலத்தில்தான் அதிகம். 218 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இது நல்ல வளர்ச்சி. வரும்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும். கரோனா நோயாளிகள் குறைந்து வருகிறார்கள் என்பதற்காக லாக் டவுன் கட்டுப்பாடுகளை நீ்க்க முடியாது, தளர்வுகளும் தர முடியாது.

கேரள மாநிலத்தில் இன்று (நேற்று) கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே கரோனா பாசிட்டிவ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஒருமாதத்தில் மிகக்குறைவான எண்ணிக்கையாகும், 17 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா நோயாளிகள் 387 பேர் இருக்கும் நிலையில், இதில் 264 பேர் வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 114 பேர் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 8 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 167 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 97ஆயிரத்து 467 பேர் கண்காணிப்பிலும், 522 பேர் தனிமைப்படுத்தப்பட்டும் கண்காணிப்பில் இருக்கிறாரக்ள். 16,475 மாதிரிகள் எடுத்து இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. மிகவும் தீவிரமான காலத்தை நோக்கிச் செல்வதால் வரும் நாட்களில் லாக் டவுன் விதிமுறைகள் தீவிரமாக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடை தொடரும். திரையரங்குகள், ஷாப்பிங் மால், மத வழிபாடு இடங்களுக்கான தடை தொடரும்.

கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து வியாழக்கிழமை நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்''.

இவ்வாறு பினாராயி விஜயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

7 mins ago

சினிமா

9 mins ago

இந்தியா

13 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

47 mins ago

உலகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்