டெல்லி கலவரத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் வெறுப்புப் பேச்சு காரணமாக இருப்பதால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வரும் 4-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடை டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி கலவரத்தை அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதால்தான் கலவரம் பெரிதாகியது. ஆதலால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதேபோன்ற மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது டெல்லி நீதிபதி முரளிதர், பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு அறிவுறுத்திய நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
இதையடுத்து, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உச்ச நீதிமன்றத்தை அணுகி மனுத்தாக்கல் செய்தனர் . இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கோலின் கோன்சால்வேஸ் ஆஜரானார்.
அப்போது வழக்கறிஞர் கோன்சால்வேஸ் கூறுகையில், "நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது, நீதிபதியும் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆதலால் அவசரம் கருதி பாதிக்கப்பட்டவர்களுக்காக உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும். நாள்தோறும் மக்கள் இறந்து வருகிறார்கள்" எனக் கோரினார்.
அதற்குப் பதில் அளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, " நாங்களும்தான் அமைதியை விரும்புகிறோம். ஆனால், உங்களுக்கு தெரியும் எங்களுக்கு இருக்கும் அதிகாரம் வரையறைக்கு உட்பட்டதுதான். இதுபோன்ற சம்பவங்களை நடக்காமல் எங்களால் தடுக்க நாங்கள் தகுதியானவர்கள் அல்ல. நிர்வாகத்தில் உள்ளவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும். சூழல் கருதிதான் நாங்கள் அணுக முடியும். நீங்கள் கோருவது கூட எங்களுக்கு ஒருவிதமான அழுத்தம்தான்.
அதிகமான அழுத்தங்களை நீதிமன்றத்தால் கையாள முடியாது. நாங்களும் நாளேடுகளைப் படித்தோம், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளைப் பார்த்தோம். இந்த வழக்கை வரும் 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago