டெல்லி வடகிழக்குப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கலவரம் ஏற்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கற்களை வீசித் தாக்கி, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்தக் கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இந்தக் கலவரத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முதல்வர் கேஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகியோ பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது, போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதனால் போலீஸார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இன்று காலையும் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
இந்தக் கலவரத்தில் தலைமைக் காவலர் உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள்,48 போலீஸார், பொதுமக்களில் 98 பேர் காயமடைந்தனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வடகிழக்கு டெல்லியில் நிலவும் பதற்றம் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும், வடகிழக்கு மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 24-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸார் உத்தரவிட்டனர்.
மஜ்பூரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இங்கு இருக்கிறேன். இதுபோல் ஒருமுறை கூட கலவரம் வந்தது இல்லை. அமைதியான இந்தப் பகுதியில் இப்போது முதல் முறையாக இதுபோன்ற கலவரம் நடந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாக இருக்கும்படியும், வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் நம்ப வேண்டாம் என போலீஸார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
அமித் ஷா ஆலோசனை
இதற்கிடையே டெல்லி கலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் முதல்வர் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, பாஜக மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி, ராம்விர் பிதூரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த முதல்வர் கேஜ்ரிவால் கூறுகையில், "கலவரம் நடந்த பகுதியில் அதைக் கட்டுப்படுத்த போதுமான அளவு போலீஸார் இல்லை. எந்த விதமான உத்தரவும் இல்லாமல் போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உள்துறை அமைச்சருடன் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் வெளியூர் நபர்கள் யாரும் உள்ளே வராத அளவுக்கு சீல் வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
36 secs ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago