நிர்பயா பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 கைதிகளில் ஒருவரான அக்சய் குமார் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக்சய் குமார் சிங் மட்டும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, "நிர்பயா வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. ஆதலால், மனுதாரரின் மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கெனவே வழங்கிய தண்டனையை உறுதி செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே மனுதாரரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிடுகையில், "மனுதாரர் அக்சய் சிங், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ய இருப்பதால், 3 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, " 3 வாரங்கள் அவகாசம் வழங்குவதை ஏற்க முடியாது. ஒரு வாரம் அவகாசம் வழங்கலாம்" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, " கருணை மனுத் தாக்கல் செய்ய காலக்கெடு விதிக்கும் விவகாரத்தைத் தவிர்க்கிறோம். சட்டத்தில் என்ன நடைமுறையோ அதைப் பின்பற்றலாம்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மனு அளித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை கைதி அக்சய் குமாரின் மறு ஆய்வு மனு மீது என்ன முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்கிறது என்பதைப் பொறுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் அக்சய் குமாரின் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்படுமா அல்லது எந்த மாதிரியான உத்தரவு வரும் என்பது தெரிந்துவிடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago