இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும், 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜதஆகிய மூன்று பெரிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியைக் காப்பாற்ற முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் 17 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தகுதி நீக்கம் செல்லும் எனவும், அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதியும் அளித்தது. மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் முடிவு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அவை நீங்கலாக மற்ற 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில்கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், மஜத இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் சிவாஜிநகர்,கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், கோகாக் உள்ளிட்ட 15 தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸூம் 15 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதும் நிலையில், மஜத 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதனால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆட்சியைக் காப்பாற்ற தீவிரம்
தற்போதைய கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 105, காங்கிரஸூக்கு 66, மஜதவுக்கு 34, பகுஜன்சமாஜ் கட்சி 1, சுயேச்சை (பாஜக ஆதரவு) 1 உறுப்பினர்கள் உள்ளனர். தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், 15 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவின்போது கர்நாடக சட்டப்பேரவையின் பலம் 222 ஆக உயரும் நிலையில் பெரும்பான்மையை பெற 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தற்போது 105 இடங்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள 7 இடங்களில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எடியூரப்பா தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தனக்கு எதிரிகளை சமாளிப்பதற்காகவும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல கூட்டணி அரசை இழந்த காங்கிரஸ் கட்சி, பாஜகவைஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக முயற்சித்துவருகிறது. இந்ததேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதன் மூலமாக எதிர்க்கட்சியையும், தங்களது கட்சியை விட்டு விலகிய தகுதி நீக்க எம்எல்ஏக்களையும் பழிவாங்க முடிவெடுத்துள்ளது. இதேபோல மஜத தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தங்களது கட்சியின் பலத்தை காட்டுவதற்காக இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
மூன்று கட்சி தலைவர்கள்
கர்நாடக அரசியலில் பல்வேறுவகைகளிலும் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் மூன்று கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், நிர்வாகிகளும் களத்தில் சுழன்று பணியாற்றிவருகின்றனர். குறிப்பாக முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமார் கட்டீல், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
உலகம்
29 mins ago
வணிகம்
46 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
4 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
6 hours ago