புதுடெல்லி, பிடிஐ
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் தாக்கல் செய்திருந்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நாளை விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், ராஜிநாமா செய்த மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருக்கின்றனர். இவர்களை சமாதானப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன.
இதற்கிடையே 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று, அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்.
இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்ஏ ராமலிங்க ரெட்டி தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வாரம் விவாதம் நடைபெற்ற நிலையில் அவையை 22-ம் தேதிக்கு (இன்று) சபாநாயகர் ஒத்திவைத்தார். ஆளுநர் விதித்த கெடுவையும், சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று காலை நம்பிக்கைவாக்கெடுப்பு மீதான தீர்மானத்தின் மீது முக்கியத் தலைவர்கள் பேசிய பின் மாலை வாக்கெடுப்பு நடக்கலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹெச். நாகேஷ், ஆர். சங்கர் இருவரும் நேற்று மாலை உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் 22-ம்தேதி(இன்று) மாலைக்குள் கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
மேலும், இந்த இரு மனுக்களோடு காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து மனுத்தாக்கல் செய்திருந்தன. இந்த இரு மனுக்களும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரஉள்ளன. இதில் சுயேச்சை எம்எல்ஏக்கள் மனுமீது உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொருத்து சபாநாயகர் ரமேஷ் குமார் முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் சுயேட்சை எம்எல்ஏக்கள் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி ஆஜராகி, இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி, உடனடியாக விசாரிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உத்தரவிடும் இந்த அவசரமானது என்று முறையிட்டார்.
ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், அவசர வழக்காக இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டார். இந்த மனுவை நாளை விசாரிக்கிறோம். இதுபோன்று இதற்கு முன் செய்தது இல்லை, உடனடியாக விசாரிக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துவிட்டார்.
சபாநாயகர் சம்மன்
இந்த சூழலில் மும்பையில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை(23-ம்தேதி) காலை 11 மணிக்கு தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி கூட்டணி கட்சியினர் அளித்த மனுவின் அடிப்படையில் சபாநாயகர் இந்த சம்மனை அனுப்பியுள்ளார்.
ஒருவேளை இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி 12 எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் 3 எம்எல்ஏக்கள் பங்கேற்கமாட்டார்கள். இதனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசின் பலம் 99 ஆகக் குறைந்துவிட்டது. அதேசமயம் சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவரின் ஆதரவால் பாஜகவின் பலம் 107 ஆகஅதிகரித்துள்ளது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
11 mins ago
விளையாட்டு
20 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
43 mins ago
கல்வி
58 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
1 hour ago