ரயில்கள் தாமதத்தை தவிர்க்க டெல்லி ஐ.ஐ.டி.யுடன் ரயில்வே ஒப்பந்தம்

By ஆர்.ஷபிமுன்னா

ரயில்கள் தாமதமாக வருவது நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், இதற்கான காரணங்களை கண்டறிந்து, சரிசெய்யும் வகையில், டெல்லி ஐஐடி (Indian Institute of Technology) கல்வி நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது.

ரயில்கள் தாமதமாக வரும் நிகழ்வுகள் தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தத் தாமதம் நிமிடக் கணக்கில் இல்லாமல் மணிக் கணக்கில் நீள்வதும் வழக்கமானதாக உள்ளது. இது குறித்த புகார்கள் பொது மக்களிடம் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் அளிப்பதுடன், ரயில்கள் தாமதம் மீது உடனடியான நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து செயலில் இறங்கிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, கடந்த வாரம் அனைத்து ரயில்வே மண்டலங்களின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் நாடு முழுவதிலும் குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவது சராசரியாக 74 சதவீதம் மட்டுமே எனத் தெரியவந்தது. மேலும் வடக்கு மத்திய ரயில்வே மற்றும் வடகிழக்கு மத்திய ரயில்வே மண்டலங்கள் வெறும் 34 சதவீத அளவில் மட்டுமே தங்கள் நேரத்தை பின்பற்றுவதாக தெரியவந்தது.

இத்துடன், தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவது கடினம் என்று அமைச்சரிடம் அதி காரிகள் வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் பிரபு, நேரப் பிரச்சினையை டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்திடம் ஒப்படைத்து, இதற்கான காரணங்களை கண்டறியவும், அவற்றை சரிசெய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இதற்காக டெல்லி ஐஐடியுடன் ரயில்வே தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான ரிட்ஸ் (Rail India Technical Service) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது. இது தற்போது இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ரயில்களின் தாமதங்களை குறைப்பதில் முக்கியப் பணியாற்றும். இதன் தொடக்கமாக மும்பை - அமிர்தசரஸ் இடையிலான பழமையான கோல்டன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஆய்வுக்கு எடுக்க உள்ளனர்” என்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீப்ராண்டியர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் பிறகு ‘கோல்டன் எக்ஸ்பிரஸ்’ என மாற்றப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் இந்த ரயிலின் பயணநேரம் 40 மணி நேரமாக இருந்தது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 8 மணி நேரமாக உள்ளது. இதுபோல் ஆக்ரா - டெல்லி இடையே 150 கி.மீ. தொலைவை கடக்க நாட்டின் அதிவேக ரயிலாக தாஜ் எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் தாஜ் எக்ஸ்பிரஸ், பல நேரங்களில் சராசரியாக மணிக்கு 10 கி.மீ. வேகத்திலும் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும், குளிர் காலங்களில் வடக்கு மத்திய ரயில்வே மற்றும் வடகிழக்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் ரயில்கள் 10 முதல் 30 மணி நேரம் வரையும் தாமதமாக வந்து சேர்வதுண்டு. பனிமூட்டம் இதற்கு காரணமாக கூறப்படு வதுண்டு. எனவே, இந்த பிரச்சினையை கையில் எடுக்க இருக்கும் டெல்லி ஐஐடிக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்துடன் இணைந்து ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க முடியாததற்கான காரணங்களை கண்டறியவும், அவற்றை சரிசெய்யவும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்