திருப்பதி என்கவுன்ட்டர் விசாரணை தொடக்கம்: பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் திருப்பதி என்கவுன்ட்டர் மீதான விசாரணை நேற்று தொடங்கியது. இதில் என்கவுன்ட்டரில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் போலீஸார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். ஆகியவற்றை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7-ம் தேதி ஆந்திர சிறப்பு அதிரடி போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில், 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யும்படி ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம், வேட்டகிரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள், ஆந்திர உயர் நீதிமன்றம், சந்திரகிரி போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு தபால் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

என்கவுன்ட்டரில் இறந்த தனது கணவர் சசிகுமார் உட்பட மேலும் 5 பேர் உடலிலும் காயங்கள் உள்ளன என்றும், இது போலி என்கவுன்ட்டர் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இந்த கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆந்திர அரசு சார்பில் ஒருவரும், என்கவுன்ட்டரால் பாதிக்கப்பட்டோர் சார்பில் முனியம்மாவும் ஆஜராயினர். இதில் முனியம்மாவை சாட்சியாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின்போது, என்கவுன்ட்டரில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, இது தொடர்பாக போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

மேலும் 6 சடலங்களில் மர்ம காயங்கள் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த 6 சடலங்களுக்கு மறு பிரேதப் பரிசோதனை செய்ய ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் முனியம்மா சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த என்கவுன்ட்டர் குறித்து விசாரனை நடத்த தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்கள் குறித்த விவரத்தை தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசு வழக்கறிஞர் பி. வேணுகோபாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

வழக்கு பதிவு

திருப்பதி என்கவுன்ட்டர் நடந்த பகுதி சந்திரகிரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால், என்கவுன்ட்டரில் இறந்தவர்களின் குடும்பத்தார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது போலி என்கவுன்ட்டர் என்றும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து சந்திரகிரி போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்