புதிய மெட்ரோ ரயில் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய மெட்ரோ ரயில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நகரங்களில், மெட்ரோ ரயிலுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதனை நிறைவேற்றும் வகையிலும், பொறுப்புள்ள வகையிலும், மெட்ரோ ரயில் சேவையை அளிக்க இந்தக் கொள்கை வழிவகை செய்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''புதிய மெட்ரோ ரயில் கொள்கையில், புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியைப் பெற வேண்டுமானால், அரசு - தனியார் பங்களிப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் இயக்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் முதலீடுகளுக்கு மிகப் பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிக முதலீடுகளுடன் உயர் திறன் கொண்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் தேவையை நிறைவு செய்வதற்காக, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தனியார் முதலீடு மற்றும் பிற புதிய வடிவிலான நிதியளிப்பு முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியாரின் ஆதாரங்கள், நிபுணத்துவம் மற்றும் தொழில்முனைவோர் திறனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மக்கள் சென்றுசேர வேண்டிய பகுதிகளுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாத நிலை மற்றும் சில நேரங்களில் முற்றிலும் போக்குவரத்து வசதி இல்லாத நிலையே நீடிக்கிறது. எனவே, புதிய கொள்கையில், மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து எந்தத் திசையிலும் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் தங்களது பகுதிகளுக்கு சென்றுசேரும் வகையில், போக்குவரத்து வசதிகள், மோட்டார் இல்லாத போக்குவரத்து வசதிகளான நடைபாதை மற்றும் சைக்கிளில் செல்வதற்கான பாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து வசதிகளை அறிமுகப்படுத்துதல் போன்றவை ஏற்படுத்தப்படும் என்று மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும். புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கோரிக்கை விடுக்கும் மாநிலங்கள், கோரிக்கைகள் மற்றும் அந்த சேவைகளுக்காக ஏற்படுத்த உள்ள முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவை குறித்து திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டியது கட்டாயம்.

பொதுமக்கள் போக்குவரத்துக்கு குறைந்த செலவிலான போக்குவரத்து முறைகளை தேர்வுசெய்வதை உறுதிப்படுத்துவதற்காக, புதிய கொள்கையில், மாற்று வழிமுறைகள் ஆய்வு, மற்ற மக்கள் போக்குவரத்து வழிகளான பேருந்து விரைவு போக்குவரத்து அமைப்பு, இலகு ரக ரயில் போக்குவரத்து, டிராம் பாதைகள், மெட்ரோ ரயில், பிராந்திய ரயில் ஆகியவற்றை மதிப்பீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேவை, திறன், செலவு, எளிதில் செயல்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில், இந்த மதிப்பீடு செய்யப்படும். திறனை அதிக அளவில் பயன்படுத்தும் வகையில், பல்வகை போக்குவரத்து ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த, நகரங்களுக்கான விரிவான இடம்பெயர்வதற்கான திட்டங்களை வகுப்பதற்காக நகர்ப்புற பெருநகர போக்குவரத்து ஆணையத்தை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கடுமையான மதிப்பீடுகளை மேற்கொள்ள புதிய மெட்ரோ ரயில் கொள்கை வழிவகை செய்கிறது. மேலும், சுதந்திரமான மூன்றாவது நபர் மதிப்பீடு செய்யப்படும். இந்த விவகாரத்தில், நகர்ப்புற போக்குவரத்து கல்வி நிறுவனம் மற்றும் பிற உயர்திறன் மையங்கள் போன்ற அரசு அமைப்புகளின் திறன்கள், தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளப்படும்.

மெட்ரோ ரயில் திட்டங்களால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பயன்களைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொள்கையானது, தற்போது பின்பற்றப்படும் முதலீடுகளுக்கு நிதி அடிப்படையில் கிடைக்கும் பலன்களான 8% என்ற மதிப்பீட்டிலிருந்து பொருளாதார அடிப்படையில் கிடைக்கும் பலன்களான 14% என்ற வகையில் மாற்றியமைக்கப்படும். இது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க பின்பற்றப்படும்.

நகர்ப்புற பொதுமக்கள் போக்குவரத்து திட்டங்களை, நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களாக மட்டும் பார்க்கக் கூடாது. ஆனால், நகர்ப்புறத்தை மாற்றியமைக்கும் திட்டங்களாக இருக்க வேண்டும். மெட்ரோ முனையங்களுடன் மக்கள் மிகுந்த நகர்ப்புற வளர்ச்சியையும், நகர்ப்புறத்துக்கு ஏற்ற வகையில் இருப்பதை ஊக்குவிக்கவும், போக்குவரத்து அடிப்படையிலான வளர்ச்சியை புதிய கொள்கை கட்டாயமாக்குகிறது. ஏனெனில், போக்குவரத்து அடிப்படையிலான வளர்ச்சி என்பது, போக்குவரத்து தொலைவைக் குறைப்பதோடு, நகர்ப்புறப் பகுதிகளில் நிலத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது.

இந்தக் கொள்கையின் கீழ், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதிக்கான ஆதாரங்களைப் பயன்படுத்த மதிப்பு அடிப்படையிலான நிதி முறைகள் போன்ற புதுமையான வழிமுறைகளை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். இதன்படி, ரியல் எஸ்டேட்களுக்கான பெட்டர்மன்ட் வரியின் மூலம், சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தொழில் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம், குறைந்த செலவிலான கடன் மூலதனத்தை மாநிலங்கள் பெற வேண்டும்.

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்காக, புதிய மெட்ரோ ரயில் கொள்கையின்படி, ரயில் நிலையங்கள் மற்றும் பிற நகர்ப்பகுதி நிலங்களில் வர்த்தக/சொத்து மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மற்றும் விளம்பரங்கள், இடங்களை வாடகைக்கு விடுதல் போன்ற கட்டணம் இல்லாத வருவாயை அதிக அளவில் ஈட்டுவதற்காக முழு ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை திட்ட அறிக்கையில் மாநிலங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும், தேவையான அனைத்து அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் பெறப்படும் என்று மாநிலங்கள் உறுதியளிக்க வேண்டும்.

புதிய கொள்கையில், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டணத்தை மாற்றியமைப்பதற்காக நிலையான கட்டண நிர்ணய ஆணையத்தை அமைக்கவும் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியுதவியைப் பெறுவதற்காக மூன்று வழிகளில் ஏதாவது ஒன்றை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ், மத்திய அரசின் நிதியுதவியுடன் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்புடன் பணிகளை மேற்கொள்வது, இந்திய அரசின் நிதியுதவியைப் பெறுவது, இதில், திட்ட செலவில் 10 சதவீதத் தொகை, மத்திய அரசின் நிதியுதவியாக மிகப்பெரிய தொகையாக வழங்கப்படும். மூன்றாவதாக, மத்திய, மாநில அரசுகளின் பங்குத்தொகையை 50:50 என்ற அளவில் பகிர்ந்துகொள்வது. மேற்கண்ட அனைத்து வழிமுறைகளிலும், தனியார் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

6 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

14 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

20 mins ago

ஆன்மிகம்

30 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்