பொதுநல வழக்கு சர்மா

By ஆர்.ஷபிமுன்னா

உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் போடுபவர்கள் என ஒரு பெரிய பட்டியலே உள்ளது. இதில் பிரசாந்த் பூஷண் போன்ற பல பிரபல வழக்குரைஞர்கள் இருப்பினும் 57 வயது வழக்கறிஞர் மனோகர் லால் சர்மாவின் பெயர்தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், குற்றவாளி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோவதைத் தடுக்கும் விதத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் துணிச்சலாக பொதுநல வழக்கினை அவர் தொடுத்திருப்பதுதான்.

இதற்காக, அவரை பாராட்டுபவர்களை விட, ‘இவருக்கு பொதுநல வழக்குகள் போடுவதை தவிர வேறு வேலை இல்லை!” என சலித்து கொள்பவர்கள்தான் அதிகம்.

1990-ல் வழக்கறிஞர் தொழிலை துவங்கிய அவர், போட்ட முதல் வழக்கே பொதுநலத்திற்காகத்தான். உத்தரப் பிரதேசத்தின் மதுராவை சேர்ந்த அவர், அங்குள்ள கிருஷ்ணஜென்ம பூமி மீது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்னும் நடந்து வருகிறது. அன்று முதல் இன்று வரை சுமார் 55 பொதுநல வழக்குகள் தொடுத்துள்ளார்.

பல்வேறு வகை நிதிகளை பெறும் என்.ஜி.ஓக்களின் கணக்குகளைக் காட்டக் கோரி இவர் போட்ட வழக்கு பிரசித்தம். பஞ்சாபின் பதான்கோட்டில் முறையான வசதிகள் இன்றி 150 மாணவர்களை சேர்த்து ஆரம்பிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியின் அனுமதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. அதற்குக் காரணம் சர்மா தொடுத்த வழக்குதான். அன்னா ஹசாரே தன் என்.ஜி.ஓ.விற்காக பெற்ற நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் ஒரு பொதுநல வழக்கை தொடுத்து உள்ளார் சர்மா.

தனியாரின் வழக்குகளையும் எடுத்து வாதிடும் சர்மா, பல முக்கிய தீர்ப்புகளை பெற்றிருக்கிறார். 2001-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ’ஸ்டாக் எக்சேஞ்ச்’ வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும், தரகருமான கமல் பாரிக் மீது இருந்த ஃபெரா வழக்கில் வாதாடி வென்றிருக்கிறார்.

ஊட்டியின் ராணுவ முகாம் சிற்றுண்டி விடுதியில் 30 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக இருந்த 80 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்தியதுடன் சலுகைகளையும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பெற்றுத் தந்துள்ளார். 3 நாள்களுக்கு முன்தான் அதற்கான தீர்ப்பு வந்தது. இந்த வழக்குக்காக அவர் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், பொதுநல நன்மைக்காக இத்தனை வழக்குகளை தொடர்ந்துள்ள சர்மா, டிசம்பர் 16-ல் நடந்த டெல்லி பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகளுக்கு ஆதரவாக துவக்கத்தில் வாதாடியதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

இந்தியா

5 mins ago

சுற்றுலா

29 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்