உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலை தவிர்க்கும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதன் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியின் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது.
உ.பி.யில் இரண்டு எம்.பி.க்களை வைத்திருந்த காங்கிரஸுக்கு இந்தமுறை அதில் ஒன்றை இழந்தது. இதில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ராகுல் காந்தி தக்க வைத்திருந்த அமேதி கைவிட்டுப்போனது.
பெரிதும் எதிர்பார்ப்புடன் தீவிர அரசியலில் களம்இறக்கப்பட்ட பிரியங்கா வதேராவாலும் கட்சிக்கு பலன் கிடைக்கவில்லை.இதனால், உ.பி.யில் காங்கிரஸ்கட்சி தன் அடிமட்டத் தொண்டரிடமும் ஆதரவு இழந்திருப்பது போலானது.
இந்த நிலையை அக்கட்சியின் உ.பி.மாநில மூத்த தலைவர்கள் குறிப்பிட்டு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து கட்சியை பலப்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, ‘தற்போதைய சூழலில் இடைத்தேர்தலிலும் வெற்றி கிடைக்காது. இதைவிட, அடிமட்டம் முதல் கட்சியை பலப்படுத்தி 2022-ல் வரும் சட்டப்பேரவையை சந்திக்கலாம். மாநில தலைவர் ராஜ்பப்பரும் ராஜினாமா செய்துவிட்டதால் புதியவரை தேர்ந்தெடுக்க கால அவகாசம் தேவை என்பதையும் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம்’ என அவர்கள் தெரிவித்தனர்.
உ.பி.யின் 80 மக்களவை தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜும், அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளத்தை சேர்த்து காங்கிரஸை விலக்கி வைத்தனர்.
மாயாவதிக்கு மட்டும் 10 தொகுதிகள் கிடைத்தன. ஆனால் கடந்த முறை 7 தொகுதிகளில் வெற்றிபெற்ற அகிலேஷ் கட்சி இந்தமுறை 5 இடங்களை மட்டுமே பிடித்தது. பாஜகவிற்கு 62, அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்திற்கு 2-ம் கிடைத்தன. இதன்மூலம், அக்கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் அவர்களுக்குள் பகிரப்படவில்லை எனத் தெரிந்தது.இதனால், மெகா கூட்டணி உடைந்து அம்மூன்று கட்சிகளும் தனித்து போட்டியிடத் தயாராகி வருகின்றன.
உ.பி.யில் நடைபெறவுள்ள 11 தொகுதிகளின் இடைத்தேர்தலால் எதிர்கட்சிகளுக்கு எந்த பலனும் இல்லை. இதற்கு அம்மாநிலத்தில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வது காரணம்.
இந்த 11-ல் பாஜகவின் 7, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜின் எம்எல்ஏக்கள் தலா ஒன்று என மக்களவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதில், காங்கிரஸுக்கு ஒரு எம்எல்ஏவும் இல்லை என்பதால் அதற்கு இடைத்தேர்தலில் வெற்றி கிட்டும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது.
இடைத்தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டால் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என காங்கிரஸ் தயங்குகிறது. எனவே, இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது எனவும், ஒருவேளை மெகா கூட்டணி தொடர்ந்தால் அதற்கு ஆதரவளித்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
க்ரைம்
6 mins ago
இந்தியா
15 mins ago
விளையாட்டு
16 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
வாழ்வியல்
10 hours ago