சில தினங்களாக நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி மேற்குவங்க விவகாரம். சிபிஐ அதிகாரிகள் கோல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க முயன்றபோது கைதுசெய்யப்பட்டு பெரும் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என பெரும் விவாதத்தை ஏற்படுத்திய அரசியல் நிகழ்வாக அமைந்துவிட்டது.
மேற்குவங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த ரூ.10,000 கோடி ஊழலை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில், காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கவே சிபிஐ சென்றது என்பது மத்திய அரசின் வாதமாகும். கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்காக இப்போது காவல் ஆணையரைக் கைது செய்ய துடிப்பது ஏன்? இது அரசியல் ரீதியான நடவடிக்கை இல்லையா? என்பது மம்தா தரப்பினரின் கேள்வி.
மேலோட்டமாக பார்க்கும்போது, இந்த கேள்வி நியாயம்தானே என்று தோன்றினாலும், 2014-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது முதல் இன்றுவரை சிபிஐ என்ன செய்து கொண்டிருந்தது என்று ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சாரதா சிட்பண்ட் மோசடியில் தொடர்புடைய மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு 2017-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதியே சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தொடர்ந்து 2018-ம் ஆண்டு ராஜீவ்குமார் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய 5 போலீஸ் அதிகாரிகளையும் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தும்படி மேற்குவங்க மாநில டிஜிபி-க்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இந்த கடிதத்தை எதிர்த்து அந்த அதிகாரிகள் மேற்குவங்க மாநில உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில்தான், கடந்த டிசம்பர் 8-ம் தேதி ராஜீவ்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி அதேமாதம் 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி வலியுறுத்தியது. அவர் ஆஜராகாத காரணத்தாலேயே அவரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நேரடியாக வருகின்றனர். எனவே, வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசியல்ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்பதை ஏற்க முடியாது.
அதேசமயம், சாரதா சிட்பண்ட் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் முகுல் ராய், அசாம் அமைச்சராக இருந்த ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது, விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை நடைபெறும்போதே அவர்கள் இருவரும் பாஜக-வில் சேர்ந்துவிட்டனர். ஹிமந்த பிஸ்வ சர்மாஇப்போது அசாம் துணை முதல்வராக உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர்களது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. அப்படியென்றால் பாஜக-வில்சேர்ந்தவர்கள் சிபிஐ விசாரணையில் இருந்து விடுபட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்ற கேள்வியை மம்தா தரப்பு எழுப்புகிறது.
இவை அனைத்தையும் பார்க்கும்போது குற்றமும் இருக்கிறது, அரசியலும் இருக்கிறது என்பதே மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
41 mins ago
ஜோதிடம்
57 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago