தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் துறைகளின் தலைமை இயக்குநர் பதவி வேண்டாம்; மறுத்த அலோக் வர்மா- ராஜினாமா செய்தார்

By தேவேஷ் கே.பாண்டே

அரசு அளித்த தீயணைப்புத் துறை, குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் துறைகளின் தலைமை இயக்குநர்  பதவிகளை ஏற்றுக்கொள்ள மறுத்த அலோக் வர்மா, ராஜினாமா செய்தார்.

 

சிபிஐ உயர் அதிகாரிகள் அலோக் குமார் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார் எழுப்பியதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் 23-ம் தேதி இரவு கட்டாய விடுமுறையில் அனுப்பியது.

 

கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் தேர்வுக் குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்தனர்.

 

உச்ச நீதிமன்ற உத்தரவால் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா செயல்படுவதில் தடை நீங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா பணியில் இணைந்தார். அதே நேரத்தில்  பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு நடத்திய கூட்டத்துக்குப் பிறகு அலோக் வர்மா அதிரடியாக நீக்கப்பட்டார்.

 

இதைத் தொடர்ந்து மத்திய அரசு அவருக்கு  தீயணைப்புத் துறை, குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் துறைகளின் தலைமை இயக்குநர் பதவியை அளித்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அலோக் வர்மா, ''கடந்த ஜூலை 31, 2017 உடன் என்னுடைய பணிக்காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது சிபிஐ இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன், ஜனவரி 31, 2019 வரை பதவிக்காலம் இருந்தது. தற்போது சிபிஐ இயக்குநராக இல்லாத காரணத்தால், தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் துறைகளின் தலைவர் பதவிக்கான வயது வரம்பைக் கடந்துவிட்டேன்.

அதனால் இன்றில் இருந்து (11.01.2019) நான் ஓய்வு பெற்றது கணக்கில் கொள்ளப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் கூறும்போது, பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு மத்திய கண்காணிப்பு ஆணையம் தன் அறிக்கையில் பதிவு செய்தது குறித்த தன் தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்கவில்லை, இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது, ஒட்டு மொத்த நடைமுறையும் தலைகீழாக்கப்பட்டு சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து என்னை அனுப்புவதை உறுதி செய்வதாகவே அமைந்தது.  சிவிசி அறிக்கையே புகார்தாரர் ஒருவரின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அந்த புகார்தாரரே தற்போது சிபிஐ விசாரணையில் இருக்கிறார். அவர் கையெழுத்திட்ட அறிக்கையைத்தான் சிவிசி அளித்ததே தவிர புகார்தாரர் ஓய்வு பெற்ற நீதிபதி பட்நாயக் முன்னிலையில் ஆஜராகவில்லை. மேலும் நீதிபதி பட்நாயக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எதுவும் தன்னுடைய கண்டுபிடிப்பல்ல என்றும் கூறியுள்ளார்.

“நேற்று நடந்தது என்னுடைய செயல்பாடுகளின் பிரதிபலிப்பல்ல, சிபிஐ அல்லது எந்த ஒரு அமைப்பும் எப்படி அரசின் கைப்பாவையாக சிவிசி மூலம் மாற்றப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பே. கூட்டு ஆத்ம பரிசோதனை செய்து கொள்வதற்கான நேரம் இது” என்று அலோக் வர்மா தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறையில் தான் பல ஆண்டுகள் பணியாற்றியதற்குக் காரணம் நான் நேர்மையானவன் என்பதே. “நான் இந்தியன் போலீஸ் சர்வீசில் இருந்துள்ளேன், அங்கு என் நேர்மையை  நிரூபித்துள்ளேன், இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. அந்தமான் நிகோபார் தீவுகளில், புதுச்சேரியில், மிசோரமில், டெல்லி போலீஸ் படையையும் நிர்வகித்துள்ளேன், தலைமையேற்றுள்ளேன். டெல்லி சிறைத்துறை, சிபிஐ ஆகியவற்றிலும் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்