இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக்கும் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி: தடையை மீறி 4 மடங்கு அதிகரிப்பு

By ஜேக்கப் கோஷி

இந்தியாவுக்குள் தடையை மீறி இறக்குமதியாகியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக 2017-18-ல் பெட் பாட்டில்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளது.  இது சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நடந்துள்ளதாக டெல்லியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பான பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் ஸ்மிருதி மஞ்ச் சாடியுள்ளது.

 

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய நிறுவனங்கள், மறுசுழற்சிக்காக சீனா, இத்தாலி, ஜப்பான், மலாவி ஆகிய நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் இறக்குமதி செய்து வருகிறது. இதில் பெட் பாட்டில் குப்பைகள் உள்ளிட்ட குப்பைகளின் இறக்குமதி நிதியாண்டு 2016-17-ல் 12,000 டன்களாக இருந்தது, 2017-18-ல் 48,000 டன்களாக  290% அதிகரித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் ஏற்கெனவே இந்தியா 25,000 மெட்ரிக் டன்கள் இறக்குமதி செய்துள்ளது” என்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

 

பெரும் இடைவெளி:

 

இந்தியா சுமார் 13 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறது, இதில் 4% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.  குப்பையைத் தரம்பிரிப்பதில் சரியான நிர்வாகமின்மையும் குப்பைகளைச் சரியாக அள்ளுவதில்லை என்பதும் வேரடிக் காரணமாகக் கூறப்படுகிறது. நிறைய பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சிக்கு வராமலேயே போய் விடுகின்றன.

 

உள்நாட்டு பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழிற்துறையை திறம்படச் செயல்பட வைப்பதற்காக 2015-ல் மத்திய அரசு பிளாஸ்டிக் குப்பைகள், குறிப்பாக பெட் பாட்டில்களை இறக்குமதி செய்யத் தடை விதித்தது.  ஆனால் 2016-ல் இந்தத் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இருக்கும் ஏஜென்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட, இதன் ஓட்டைகள் தற்போது சுரண்டப்பட்டு சட்டவிரோத பிளாஸ்டிக் குப்பை இறக்குமதிகள் நடைபெற்று வருகின்றன.

 

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, பிளாஸ்டிக் குப்பைகள் இறக்குமதி 4 மடங்கு அதிகரித்தது பற்றி தெரியாது என்று கூறினாலும் இறக்குமதி கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இது குறித்து டாக்ஸிக் லிங்க் என்ற பிளாஸ்டிக் குப்பை மேலாண்மை அமைப்பின் இயக்குநர் ரவி அகர்வால் கூறும்போது, மறுசுழற்சிக்கான உலகின் பெரிய பிளாஸ்டிக் இறக்குமதி நாடான சீனா இறக்குமதிக்குத் தடை விதித்தது. அதனால் அவை இந்தியா பக்கம் திருப்பி விடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது, எனவே 4 மடங்கு அதிகரிப்பு சாத்தியமே, ஆனால் அளவு குறித்து உறுதியாக கூற முடியாது, என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்