வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி எதுவாக இருக்கும் என்ற ஐயம் எழுந்துள்ளது. அவருக்கு வேறு பல மாநிலங்களிலும் போட்டியிட பாஜகவினர் அழைப்பு விடுத்திருப்பதுதான் காரணம்.
கடந்த 2014-ல் தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர் நரேந்திர மோடி. அதுவரையும் குஜராத்தில் ஆளும் பாஜகவின் முதல்வராக இருந்தவர் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.
அவர் தேர்ந்தெடுத்த குஜராத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலும் மோடிக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. இதில், வதோதராவை ராஜினாமா செய்தவர் வாரணாசியின் எம்.பி.யாகத் தொடர்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் மோடியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆவேசம் எதிர்க்கட்சிகள் இடையே பெருகி வருகிறது.
மோடியை எதிர்த்து சத்ருகன் சின்ஹா
பிஹாரின் பாட்னா சாஹேப் தொகுதி எம்.பி.யான பாலிவூட் நடிகர் சத்ருகன் சின்ஹாவை முன்னிறுத்தும் முயற்சியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் இறங்கியுள்ளார். இதற்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, மோடி வேறு தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஒடிஸாவில் தீர்மானம்
ஒடிஸா பாஜகவினர் மோடிக்கு தம் மாநிலத்தில் உள்ள பூரி தொகுதியில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தனர். வாரணாசியை போன்று தெய்வீக நகரமான இங்கு உலக பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. சமீபத்தில் அம்மாநில பாஜகவினரால் பிரதமர் மோடி மற்றும் கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆட்சி அமைக்கும் வாய்ப்பு
மக்களவையுடன் சேர்த்து ஒடிஸாவின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு முதன்முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜக எதிர்பார்த்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் அங்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு வருவது முக்கியக் காரணம். இதனால், ஒடிஸாவில் மோடி போட்டியிட்டால் அது தாம் ஆட்சி அமைக்க பலன் தரும் என பாஜக தன் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிஹாரிலும் அழைப்பு
இதேபோல், பிஹாரில் பாஜக ஆதரவில் ஆளும் முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக அரசியல் எழும்பத் தொடங்கி உள்ளது. இதனால், மீண்டும் அவர் தனது ஐக்கிய ஜனதா தளத்தை லாலுவுடன் சேர்ந்து விடுவார் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதனால், பிரதமர் மோடி பிஹாரில் போட்டியிட்டால் பாஜக செல்வாக்கு உயரும் எனவும், அதன்மூலம் அக்கட்சி சட்டப்பேரவையில் தனியாகவே ஆட்சி அமைக்கலாம் எனக் கருதுகிறது. பாஜகவில் வென்று கட்சிக்கு எதிராகத் திரும்பிவிட்ட பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் பாட்னா சாஹேப் தொகுதி மோடிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காந்திக்காக குஜராத்
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், மேற்கு அல்லது கிழக்கு சாம்பாரனில் போட்டியிடவும் யோசனை அளிக்கப்பட்டுள்ளது. இதே காந்தி நினைவின் காரணமாக குஜராத்தில் மோடி போட்டியிட வேண்டும் என்றும் அம்மாநிலப் பாஜகவினர் கோரி வருகின்றனர்.
தமிழகத்தில் முயற்சி
தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு என்பது இந்தியாவின் எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் உள்ளது. இதை முறியடித்து பாஜகவின் நிலையை உயர்த்த மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அம்மாநிலத் தலைவர்கள் கோரியுள்ளனர்.
உ.பி.யின் தனி மெஜாரிட்டி ஆட்சி
சமீபத்தில் டெல்லியில் முடிந்த பாஜகவின் பொதுக்குழுக் கூட்டத்திலும் இந்த பேச்சு ஓங்கி ஒலித்துள்ளது. எனினும், புண்ணிய நதியாகக் கருதப்படும் கங்கையை தன் தாய் எனக் குறிப்பிட்டு மக்களவையில் களம் இறங்கிய மோடி வாரணாசியை விடுவது மிகவும் சிரமம். ஏனெனில், இங்கு தனி மெஜாரிட்டியில் அமைந்த பாஜக ஆட்சி தக்க வைத்தால் தான் மத்தியில் ஆதிக்கம் செலுத்த முடியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago