அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், ’பொய்யர்கள் பாஜக’ மத்தியில் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள் என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.
2014-ம் ஆண்டு தேர்தலின்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக வாக்கறுதி அளித்திருந்தது அதை இன்னும் பாஜக நிறைவேற்றவில்லை. இது குறித்து சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து தலையங்கத்தில் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாஜகவுக்கு நல்ல காலம் உருவாக, ஆட்சியில் அமர முக்கியக் காரணமாக இருந்தவர் கடவுள் ராமர். ஆனால், உத்தரப்பிரதேசம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டப்படும் என்று பாஜக கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் உறுதியளித்துவிட்டு, இன்னும் அதை நிறைவேற்றாமல் இருக்கிறது.
அயோத்தியில் பாஜக பொய்யர்கள், ராமர் கோயில் கட்டாவிட்டால், அடுத்த தேர்தலில் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது. இருந்தபோதிலும் கூட அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்விவகாரத்தில் தொடர்ந்து பாஜக தாமதம் செய்து வருகிறது.
அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் சமீபத்தில் கூறுகையில், பிரதமர் மோடி ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை உருக்கமாக உச்சரிக்கிறார், ஆனால், ராமர் கோயில் கட்டுவது குறித்து ஒருவார்த்தை கூட பேசுவதில்லை. உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் எளிதாக ராமர் கோயில் கட்டமுடியும் என்று கூறியது. ஆனால், இப்போது, ராமர் கோயிலுக்கு ஆதரவாக யாரேனும் பேசினால், உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு அவர்களைக் கைது செய்கிறது.
அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர் மகந்த் பிரம்மஹன்ஸ் தாஸ் ராமர் கோயில் கட்டுவதற்காக உண்ணாவிரதம் இருந்தார், ஆனால், அவரை வலுக்கட்டாயமாக போலீஸார் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ராமர் கோயில் கட்டுவதற்காகப் போராட்டம் நடத்தும் இந்து ஆர்வலர்களுக்காக எப்போது இருந்து பாஜக கவலைப்படத் தொடங்கியது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், ஏராளமான ராம பக்தர்கள் போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். அப்போது இருந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று ராமர் பெயரை வலுவான அரசியல்சக்தியாக்கியது. ராமரும் பாஜகவுக்கு நல்லகாலத்தைக் காட்டி ஆட்சியில் அமரவைத்தார். இப்போது, கடவுள் ராமரே வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறார்.
ராமர் கோயில் கட்டுவது குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது, நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக கபட நாடகம் போடுகிறது. ராமர் கோயில் குறித்துப் பேசினால், நீதிமன்றத்தைக் காரணம் காட்டி பாஜக தப்பித்துவிடுகிறது.
முத்தலாக் விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர பாஜக அரசால் முடிகிறது, நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக எஸ்சிஎஸ்டி பாதுகாப்புச் சட்டத்தில் அவசரச் சட்டத்தை பாஜக அரசு பிறப்பிக்கிறது. ஆனால், ராமர் கோயில் கட்டுவதற்கும், பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கும் ஏன் அவசரச்சட்டத்தை பாஜக அரசால் பிறப்பிக்க முடியவில்லை.
இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
சினிமா
56 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
உலகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
4 hours ago