கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் 25 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடகாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 79 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் ஓரிடத்திலும் மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சி என்ற முறையில் முதலில் பதவியேற்ற பாஜக பின்னர் பதவி விலகியது. இதையடுத்து மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 23-ம் தேதி பொறுப்பேற்றது. முதல்வராக குமாரசாமியும் துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஷ்வரும் பதவியேற்றனர்.
எனினும் இரு கட்சிகள் இடையே அமைச்சரவை பகிர்வில் இழுபறி நீடித்ததால் அப்போது அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. காங்கிரஸ், மஜத மேலிடத் தலைவர்கள் 5 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸுக்கு துணை முதல்வர் உட்பட 22 பதவிகளும், மஜதவுக்கு முதல்வர் உட்பட 12 பதவிகளும் என பிரித்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடித்த இழுபறியை தொடர்ந்து, நேற்று பிற்பகல் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தது. இதில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், பிரியங்க் கார்கே உள்ளிட்ட 14 பேரும் அதன் கூட்டணிக் கட்சியான கேபிஜேபி எம்எல்ஏ சங்கரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதையடுத்து மஜத சார்பில் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி.தேவகவுடா உள்ளிட்ட 9 பேரும் அதன் கூட்டணிக் கட்சியான பகுஜன் சமாஜ் சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் எம்எல்ஏ மகேஷும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதியதாக பொறுப்பேற்ற 25 அமைச்சர்களில் காங்கிரஸைச் சேர்ந்த நடிகை ஜெயமாலா மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் பலர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக அமைச்சராக பதவியேற்றுள்ளார். உ.பி.யை கடந்து, பிற மாநிலம் ஒன்றில் பகுஜன் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பதவியேற்பதும் இதுவே முதல்முறை. இதனால் அக்கட்சியின் தலைவர் மாயாவதி மகிழ்ச்சி அடைந்துள்ளார். தேர்தலில் மஜத 37 இடங்களில் வெற்றிபெற பகுஜன் சமாஜ் உறுதுணையாக இருந்ததால் அக்கட்சிக்கு மஜத அமைச்சர் பதவி வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
11 hours ago