ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: அமலாக்கத் துறை முன் ப.சிதம்பரம் மீண்டும் ஆஜர்

By செய்திப்பிரிவு

ஏர்செல் - மேக்சிஸ் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமலாக்கத்துறை முன்பு நேற்று இரண்டாவது முறையாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்ட நடைமுறையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்று ப.சிதம்பரம் கடந்த 5-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 5 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதன் பிறகு ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோப்புகளில் ஏற்கெனவே பதிவாகியிருப்பது குறித்தே கேள்விகள் கேட்கப்பட்டன. எனவே அதற்கான விடைகளும் கோப்புகளிலேயே இருந்தன. இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை, குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. என்றாலும் விசாரணை நடைபெறுகிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் 2-வது முறையாக நேற்று அமலாக்கத்துறை முன் ப.சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் “ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மற்றொரு சுற்று கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விவகாரத்தில் என் மீது வழக்கோ அல்லது குற்றச்சாட்டோ இல்லை என்பதை நினைவூட்டினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்