புதுடெல்லி: தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தி பொது நலனுக்காக பயன்படுத்துவது தொடர்பான 30 ஆண்டு பழைய வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
1986-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு, மகாராஷ்டிரா வீட்டு வசதி திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை சீரமைப்புக்காக அரசு கையப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு சொத்து உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை எதிர்த்து மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
1991-ல் அந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், ஏழைகளுக்கு வீடு வழங்குவது என்பது அரசின் கடமை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, 1992-ம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் சங்கம் மேல்முறையீடு செய்தது. பல்வேறு தரப்பினரும் மகாராஷ்டிரா அரசின் சொத்து கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
முதலாளித்துவமும், சோசியலிசமும்: இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “முதலாளித்துவமும், சோசியலிசமும் சொத்து குறித்து வெவ்வேறு பார்வையைக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம், அனைத்து சொத்துகளையும் தனி மனிதர்களுக்கு உரியதாகப் பார்க்கிறது.
அதுவே, சோசியலிசம், அனைத்தையும் பொதுமக்களுக்கானதாகப் பார்க்கிறது. இந்தியாவில் நாம் சொத்துகளை, முழுவதும் தனிநபருக்கு உரியதாகவும் அல்லது முழுவதும் பொதுமக்களுக்கு உரியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஒன்றாக அணுகுகிறோம்.
நம்முடைய அரசமைப்புச் சட்டம் சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டது. எனவே, பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது” என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.
பிரதமர் கருத்தால் சர்ச்சை: சமீபத்தில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு சொத்து மறுபகிர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “காங்கிரஸ் அதன் சொத்து மறுபகிர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகள், தங்கம், வாகனங்கள் உள்ளிட்ட தனியார் சொத்துகளை அபகரிக்கப்போகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்தை பறித்து அவற்றை அதிக குழந்தைகளைப் பெற்ற ஊடுருவல்காரர்களுக்கு வழங்கிவிடும். இந்துப் பெண்களின் தாலியைக் கூட காங்கிரஸ் விட்டு வைக்காது” என்று பேசினார்.
மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், தாங்கள் இது போன்ற எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், சொத்து கையப்படுத்துதல் மற்றும் சொத்து மறுபகிர்வு தொடர்பான 30 வருட பழைய வழக்கின் விசாரணை கவனம் பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 mins ago
விளையாட்டு
56 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago