புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிகளின் புகார் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் விளக்கம் கேட்டு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில், பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக, தவறானதாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாக இருப்பதாகக் கூறியிருந்தது.
இந்த நிலையில்தான் இந்த புகாரின் அடிப்படையில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று தேர்தல் விதிமுறைகளை மீறிய புகார் ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம் தனது உத்தரவில், “வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சார நடத்தைக்கு அரசியல் கட்சிகள்தான் முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. முதல்கட்டமாக பாஜகவின் புகார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், காங்கிரஸின் புகார் பாஜக தலைவர் ஜெபி நட்டாவுக்கும் உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து பரஸ்பர புகாரின் மீது தற்போது விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி மீது புகார் ஏன்?: நாட்டில் வறுமை அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தி தவறான கூற்றை கூறி வருகிறார். மேலும், தேர்தல் சூழலை சீர்குலைப்பதற்காக மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் நாட்டில் வடக்கு-தெற்கு பிரிவினையை ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார் என்று கடந்த திங்கள்கிழமை பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் தான் தற்போது ராகுல் காந்தியும் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோடி என்ன பேசினார்? - முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி.
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்? என நினைவுகூர்வோம். “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார். அப்படியென்றால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பார்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று மோடி பேசியிருந்தார். இதுவே, இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
13 mins ago
உலகம்
36 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
55 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago