‘‘காவிரி தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை? மே 3- ம் தேதிக்குள் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்’’ - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், வரைவு மேலாண்மை திட்டத்தை தயாரித்து மே  3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு அளித்தது.

அதில், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘செயல்திட்டம்’ (ஸ்கீம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்” என உத்தர விட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிந்து பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடியும் கடைசி நாளில் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள, ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்பதற்கு விளக்கம் என்ன என சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசின் நீர்வளத் துறை விளக்கம் கோரியது. மேலும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, குறிப்பாக செயல் திட்டம் (ஸ்கீம்) என்ற வார்த்தைக்கு கர்நாடகாவும், தமிழகமும் இரு வேறுபட்ட விளக்கங்களை அளிக்கின்றன.

எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும், இதற்காக கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு உரியமுறையில் அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஏப்ரல்- 9ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி,  இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதுபோலவே, ‘ஸ்கீம்’ குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பிற மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்தது.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

‘‘உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை நீங்கள் நடைமுறைப் படுத்தவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மார்ச் 29-ம் தேதிக்குள் ஏன் செயல்படுத்தவில்லை. நாங்கள் உத்தரவு பிறப்பித்தபின் அதனை நீங்கள் கட்டாயமாக செயல்படுத்துவதில் உங்களுக்கு பிரச்சினை ஒன்றும் இல்லையே. பிறகு எதனால் தாமதம் ஏற்படுகிறது.

 நதிநீர் பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் தலையிட்டு நாங்கள் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. அதனால் தான் இதற்கான செயல் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூறினோம்.நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கினோம்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து, வரைவு திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்த பின்பே இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியும்.  கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதி நிலவுதை உறுதி செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மே  3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’’

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

உரிய காலத்திற்குள் வரைவு திட்டத்தை சமர்பிப்பதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் தெரவித்தார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

32 mins ago

ஆன்மிகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்