புதுடெல்லி: “என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால். நான் தீவிரவாதி அல்ல” என்று பாலிவுட் சினிமா படத் தலைப்பு பாணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையிலிருந்தவாறு மக்களுக்கு செய்திக் குறிப்பு அனுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சிறையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு கிரிமினல் குற்றவாளியைவிட மோசமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மோசமாக நடத்தப்படுகிறார். ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு கூட அவரது மனைவியையும், வழக்கறிஞரையும் வராண்டாவில் வைத்து சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனால், கேஜ்ரிவால் கண்ணாடி தடுப்பின் பின்னால் இருந்தே பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்தித்தார். அப்போது பகவந்த் மானிடம் கேஜ்ரிவால் தனக்கு சிறையில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அந்த வேதனையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், கேஜ்ரிவால் ஒரு தகவல் அனுப்பியுள்ளார். “என் பெயர் கேஜ்ரிவால். நான் தீவிரவாதி அல்ல” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்” என விவரித்தார்.
இந்த வரிகள் ஷாருக்கான் நடித்த ‘மை நேம் இஸ் கான்’ படத் தலைப்பு பாணியில் அமைந்துள்ளது. அந்தப் படத்தில் ஷாருக்கான் “என் பெயர் ஷாருக்கான்; நான் தீவிரவாதி அல்ல” என்று பேசியிருப்பார்.
பகவந்த் மான் குற்றச்சாட்டு என்ன? - முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான், திஹார் சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறும்போது, “சிறையில் கடும் குற்றவாளி களுக்கு கிடைக்கும் வசதிகள் கூட டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக் கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப் பெரிய தீவிரவாதியை பிடித்தது போல் அவரை திஹார் சிறையில் நடத்துகின்றனர். பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?
வெளிப்படைத்தன்மை அரசியலை தொடங்கி பாஜகவின் அரசியலுக்கு முடிவு கட்டிய நேர்மையான முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இப்படி நடத்தப்படு வது ஏன்? நாங்கள் அரசியலை பணியாக செய்கிறோம். நாங்கள் கேஜ்ரிவாலுடன் நிற்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ம் தேதி, ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும்” என்று பகவந்த் மான் கூறினார். கண்ணாடித் தடுப்புக்கு பின்னால் நின்றவாறு தொலைபேசி இணைப்பு மூலம் இருவரும் 30 நிமிடங்கள் பேசியதாக திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைத் துறை மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறைத் துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பனிவால் நேற்று அளித்த பேட்டியில், “மோசமான கிரிமினல் குற்றவாளி, சாதாரண குற்றவாளி என்றெல்லாம் எந்தவித பாகுபாடும் சிறையில் இல்லை. ஒவ்வொரு சிறைக் கைதிக்கும் அவர்களுக்கான உரிமை வழங்கப்படும். அதை நான் உறுதி செய்கிறேன். யாருக்கும் சிறப்புச் சலுகை இல்லை. அதற்கான வழிவகைகள் ஏதும் சிறை விதிமுறைகளில் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா கடந்த 9-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், கேஜ்ரிவாலுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை அமலாக்கத் துறை சமர்ப்பித்து உள்ளது. அவரை கைது செய்தது சட்டபூர்வமாக செல்லும் என்று தெரிவித்தார்.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தற்போது டெல்லி திஹார் சிறையில் உள்ளார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் அவர் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவாஜா உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
8 hours ago