புதுடெல்லி: கிராமப்புறங்களில் 100 நாள் வேலையை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 4 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக அதிகரித்துள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கிராமங்களில் வசிக்கும் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்கு ஓர் ஆண்டில் 100 நாள்வேலைக்கு உறுதி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் சாலை அமைத்தல், கால்வாய், குளம், கிணறு வெட்டுதல், தூர்வாருதல் போன்ற பணிகளில் இந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
‘இத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் பல மாநிலங்களில் அதிக வேறுபாட்டுடன் உள்ளது. தவிர, விலைவாசிக்கு ஏற்ப இல்லாமல், மிகவும் குறைவாக உள்ளது’ என நாடாளுமன்றத்தில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கான நிலைக்குழு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் இத்திட்டத்தின் ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் ஊதியம் 4 முதல்10 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு ஊதிய விகித அடிப்படையில் இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன்மூலம் ஹரியாணாவில் அதிகபட்சமாக தொழிலாளரின் தினசரி ஊதியம் 374 ஆக அதிகரிக்கும். தமிழகத்தில் ரூ.294 ஆக இருக்கும் ஊதியம் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சமீபத்தில் ரூ.290 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.29 அதிகரிக்கப்பட்டு, ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி விமர்சனம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்களுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடி உங்கள் ஊதியத்தில் ரூ.7 அதிகரித்துள்ளார். ‘இவ்வளவு அதிகமான பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று அவர் கேட்கலாம். ரூ.700 கோடி செலவழித்து உங்கள் பெயரில் ‘நன்றி மோடி’ என்றுகூட அவர் பிரச்சாரம் செய்யலாம். இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், முதல் நாளில் இந்த ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமீறலா? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடுகின்றன. அதன்பிறகு, அரசு புது திட்டங்கள், சலுகை அறிவிப்புகளை வெளியிடகூடாது என்பது விதிமுறை.
எனவே, 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தும் அறிவிப்புக்கு, தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது. இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் ஊதியம்போதுமானதாக இல்லை என நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால், அதன்படி ஊதிய உயர்வு மாற்றி அமைக்கப்படுவதாக தெரிவித்து, அந்த அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி கோரியது.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்த பிறகே, இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ‘‘இந்த ஊதிய உயர்வு மிகவும் குறைவு. தவிர, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அறிவித்தது நடத்தை விதிமுறை மீறல்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
இந்தியா
16 mins ago
தொழில்நுட்பம்
22 mins ago
சினிமா
26 mins ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
32 mins ago
உலகம்
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
39 mins ago
வாழ்வியல்
1 hour ago
சுற்றுலா
10 hours ago
வாழ்வியல்
1 hour ago