தேர்தல் ஆணையர்கள் நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை உறுப்பினர்களாக கொண்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணையப் பதவியில் இருந்து வந்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வந்துள்ள நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் பிரதமர் தலைமையிலான குழு கடந்த 14-ம் தேதி கூடியது. அப்போது ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகிய இருவரையும் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர். இதையடுத்து இருவரும் கடந்த வாரம் புதிய தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனிடையே, புதிய சட்டத்தில் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையர்களை நியமித்த விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் வழக்கை வரும் 21-ம் தேதி விசாரிப்பதாக ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:

புதிய தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிப்பதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

பிரச்சினை ஏற்படுத்த முயற்சி: இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவில் உள்ளார். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்களின் தகுதி குறித்து ஆட்சேபம் தெரிவிக்கவும் மனுதாரர் தவறிவிட்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்புதான். இந்த ஆணையம் தேர்தல்களை நடத்துவதில் மட்டுமே தனது பணிகளைச் செய்கிறது. இவ்வாறு அதில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 secs ago

சுற்றுச்சூழல்

14 mins ago

தமிழகம்

14 mins ago

சுற்றுலா

29 mins ago

வாழ்வியல்

30 mins ago

வாழ்வியல்

39 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்