தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட ஒருவர் எப்படி கட்சிக்கு தலைமை ஏற்க முடிகிறது? இதை ஏன் தடுக்கவில்லை என்று 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவில், ‘நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்கள் ஒரு கட்சிக்கு தலைமை ஏற்கின்றனர். அவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கட்டுப்படுத்துகின்றனர். மாட்டுத்தீவன ஊழலில் தண்டனை பெற்ற லாலு பிரசாத், ஆசிரியர் தேர்வு ஊழலில் தண்டனை பெற்ற ஓ.பி.சவுதாலா போன்றோர் இதற்கு உதாரணம். இதுபோன்றவர்கள் அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பு வகிப்பதை தடுக்கவும், அக்கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதிலில், ‘‘அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் தேவை. அதற்கேற்ப மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று 20 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை’ என்று கூறினார். அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஓர் அரசியல் கட்சிக்கு தலைமை ஏற்க முடிகிறது? மக்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை அவர் எப்படி முடிவு செய்ய முடியும்? மக்கள் பிரதிநிதிகளை அவரால் எப்படி கட்டுப்படுத்த முடிகிறது? அரசியலில் குற்றவாளிகள் இடம்பெறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக இது அமைகிறது. வேட்பாளர்கள் யார் என்பதை குற்றவாளிகள் முடிவு செய்வது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே விரோதமானது. தேர்தல் ஆணையம் செய்ய முடியாததை, மத்திய அரசுடன் இணைந்து செய்ய வேண்டும். இதுகுறித்து 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
இந்தியா
35 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
3 hours ago