பணமதிப்பு நீக்கம்: சாதித்தது என்ன?

By நெல்லை ஜெனா

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8ம் தேதி, பழைய 500 - 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். நாடுமுழுவதும் புழக்கதத்தில் இருந்த மொத்த பணத்தில் 86 சதவீதத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவு என்பது சாதாரணமானது அல்ல.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும் மத்திய அரசு வர்ணித்தது. ஆனால், இதனால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வர்த்தகர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்

ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி, தொழில் நிறுவனங்கள் - தொழிலாளி, நகர்ப்புறவாசிகள் - கிராம மக்கள் என பாகுபாடின்றி, ஒரு நாள் இரவில் மேற்கொண்ட நடவடிக்கையால் ஆடிப்போனார்கள். மக்கள் மட்டுமின்றி அரசு நிர்வாகம், வங்கித்துறை என அனைத்துத் துறைகளும் செய்வதறியாமல் திகைத்தன.

100 ரூபாய் பணம் எடுப்பதற்குக் கூட மணிக்கணக்கில் வங்கி வாசல்களில் காத்திருக்க வேண்டிய அவலம். நாள் கணக்கில் மக்கள் பட்ட அவஸ்தை சொல்லி முடியாது. சிறு சிறுத் தேவைக்கு பணம் எடுப்பது முதல் திருமணச் செலவுக்கு பணம் எடுப்பது வரை என அனைத்தும் சிக்கலானது.

நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் தவிர்த்தவர்கள் பலர், உயிரை விட்டவர்கள் சிலர். பல லட்சம் கோடி ரூபாய் பழைய நோட்டுக்களை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்குவது சாதாரண காரியமல்ல, வங்கிகள் தவித்துப் போயின. மாதக்கணக்கில் நீடித்த இந்த அவலம் நாள்தோறும் செய்திகளாகின, ஆவணங்களாகின.

சாதாரண மனிதன் பட்ட துயரங்கள் இதுவென்றால், சிறு வணிகர்கள், பெரு நிறுவனங்கள், மாநில அரசுகள் என பல தரப்பும் சந்தித்த பொருளாதாரப் பாதிப்புகள் ஏராளம். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இதன் பாதிப்புகள் வடுக்களாக பதிந்து விட்டன. ஒராண்டு கடந்து விட்டாலும் நாடு சந்தித்த பொருளாதார பாதிப்பு இன்று வரை தொடர்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மத்திய அரசு கூறிய முதல் முக்கிய காரணம் கருப்புப் பண ஒழிப்பு. ஆனால் மதிப்பிழந்த பழைய ரூபாய் நோட்டுக்களில் 99 சதவீதம் திரும்ப வந்து விட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு 15.40 லட்சம் கோடி ரூபாய் வரை பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், அதில் 15.28 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. அப்படியானால் கருப்புப் பணம் என கருதப்படும் ஊழல் பணம் என்ன ஆனது. அனைத்தும் வங்கிக்கு திரும்பி வந்து விட்டது என்றால் கருப்புப் பண ஒழிப்பு முயற்சி என்ன ஆனது? என்ற கேள்வி எழுகிறது.

அதுபோலவே போலி நோட்டுகள் மற்றும் பழைய நோட்டுக்கள் மதிப்பிழந்தால் தீவிரவாத நடவடிக்கை குறையும் என்றும் மத்திய அமைச்சர்கள் கூறினர். புதிய ரூபாய் நோட்டுகளிலேயே போலிகள் வந்ததால் இந்த முயற்சியும் தோல்வியா? என்ற கேள்வி எழுகிறது. அதுபோலவே, தீவிரவாத நடவடிக்கை எந்த அளவிற்கு கட்டுப்பட்டுள்ளது என்பதும் மில்லியன் டாலர் கேள்வியே.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி இப்போது பேசும் மத்திய அமைச்சர்கள், வருமான வரி உயர்ந்துள்ளது, பலரும் வரி வளையத்திற்குள் வந்துள்ளனர், ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் உயர்ந்துள்ளது, போலி நிறுவனங்கள் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளன எனக் கூறி வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, 10,600 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. பணமதிப்பு  நீக்க நடவடிக்கையின் போது ரொக்கப் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்காலிக நிகழ்வாக பலரும் ஆன்லைன் மூலம் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு தள்ளப்பட்டனர். ஆனால், அதன் பின் நிலைமை சீராகத் தொடங்கிய பின் நிலைமை மாறி விட்டது.

இந்தியா போன்ற கிராமப்புறங்கள் நிறைந்த, பல தரப்பு மக்கள் வாழும் நாட்டில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதும் கேள்விக்குறியே. பணமதிப்பு நீக்க நடவடிக்கை சாதித்து என்ன என்ற கேள்விக்கு ஏராளமானோருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது கூட சாதனையாக கூறப்படுகிறது.

ஆனால், 70 முதல் 80 சதவீதம் வரை முறை சாரா துறை சார்ந்த மக்கள் வாழும் நம் நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு சிறு கடைகளில் வணிக பாதிப்பு, வேலையிழந்த தொழிலாளர்கள், பெரிய வர்த்தக வாய்ப்புகள் கைவிட்டுப் போன தொழில் நிறுவனங்கள் என சந்தித்து வரும் பாதிப்புகள் ஏராளம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியும் சுருங்கிப் போனதும் இந்த நடவடிக்கையால் தான் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குத் தர வேண்டிய ஈவுத்தொகை குறைந்து போனதற்கு கூட பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணம் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

31 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்