திருநெல்வேலி: திருநெல்வேலியில் பெருவெள்ளத்துக்குப் பின் குப்பைத் தொட்டியாக தாமிரபரணி காட்சியளிப்பது குறித்து இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு சமவெளி பகுதிகளில் 126 கி.மீ பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் வாழ்வாதாரமாகவும் தாமிரபரணி விளங்குகிறது. இதனால் ஆற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தாமிரபரணி கரையோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக்குவதும், கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதி குடியிருப்புகளை சூழ்ந்தது. வெள்ளத்தில் மரக்கட்டைகள், செடி, கொடிகளுடன் குப்பைகளும், கழிவுகளும் அடித்து வரப்பட்டிருந்தன. ஆற்றில் வெள்ளம் தணிந்தபின் இந்த குப்பைகளும் கழிவுகளும் ஆற்றங்கரையில் ஆங்காங்கே தேங்கிவிட்டன. அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் அடித்துவரப்பட்டு ஆற்றங்கரையோர மரங்களிலும், முட்புதர்களிடம் சிக்கி தேங்கிவிட்டன.
தேங்கிக் கிடக்கும் இந்த குப்பைகள், கழிவுகளால் ஆற்றங்கரைகளில் தற்போதுவரை துர்நாற்றம் வீசுகிறது. படித்துறைகளையொட்டி தேங்கியுள்ள குப்பைகளால் ஆற்றில் குளிக்க வருவோர் அவதிப்படுகிறார்கள். ஆற்றங்கரை முழுக்க குப்பை தொட்டியாக காட்சியளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். வெள்ளம் தணிந்து 1 மாதமாகியும் ஆற்றங்கரையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற அரசும், ஆட்சியாளர்களும் முன்வராதது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து இயற்கை ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன் கூறியதாவது: "தாமிரபரணி ஆற்றை காக்க வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு கரைகளிலும், முட்செடிகளிலும் தங்கியுள்ள குப்பை கழிவுகளையும், முட்புதர்கள், செடிகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாக்கடை கழிவுநீரும், குப்பைகளும் தாமிரபரணயில் கலக்காமல் இருக்க அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுத்து அந்த அறிக்கையை பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டும். ஆற்று நீரின் மாசு குறித்து அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்", என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago