ராமேசுவரம்: மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் உள்ள டால்பின்களைப் பாதுகாக்க ரூ.8.13 கோடியில் ‘டால்பின் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 350 கி.மீ. கடல்பரப்பில், 10,500 சதுர கி.மீ. பரப்பளவை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோளக் காப்பகமாக மத்திய அரசு கடந்த 1989-ல் அறிவித்தது. யுனெஸ்கோ அமைப்பும் இதற்கு அங்கீகாரம் அளித்தது.
இந்த கடல்வாழ் உயிர்கோளக் காப்பகத்தில் 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் 4,223 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் அழிந்து வரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப் பாறைகள், 14 வகை கடல் புற்களும் அடங்கும்.
தமிழக அரசு ரூ.5 கோடியில் `கடற்பசு பாதுகாப்பகம்' அமைக்க கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்ட நிலையில், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் டால்பின்களைப் பாதுகாக்க ரூ.8.13 கோடியில் புதியதிட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலின் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் டால்பின்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன. இதில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் டால்பின்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.
கடந்த ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் 7 டால்பின்கள் மீட்கப்பட்டு, மீண்டும் கடலில் விடப்பட்டன. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகப் பகுதியில் டால்பின்களைப் பாதுகாக்க ரூ.8.13 கோடியில் ‘டால்பின் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த பிற மக்களுடன் இணைந்து, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டால்பின்கள் மற்றும் அவற்றின் நீர்வாழ் வாழ்விடங்களைப் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். டால்பின் இனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும், உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், கடல் புல் போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைமீட்டெடுப்பதன் மூலம் டால்பின் வாழ்விடத்தை மேம்படுத்தலாம். சிறந்த வேட்டை தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அவற்றின் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்.
விழிப்புணர்வை ஏற்படுத்துதல்..: கடலோரப் பகுதிகளில் மாசுபாட்டைக் குறைத்தல், உள்ளூர்மக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ‘டால்பின் உதவித்தொகை' திட்டம் தொடங்குதல், தேசிய டால்பின் தினத்தைக் கொண்டாடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தல் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த திட்டத்தின்முக்கிய நோக்கமாகும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
35 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
வணிகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
க்ரைம்
12 hours ago
தமிழகம்
13 hours ago