தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த மாவட்டம் மற்றும் சொந்த தொகுதியை உள்ளடக்கிய சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறங்க தற்போதே போட்டா போட்டி தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி இன்னமும் இறுதி முடிவை எட்டாத நிலையில், ஒவ்வொரு கட்சியிலும் தேர்தலில் போட்டியிட பலர் தயாராகி வருகின்றனர். இத்தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக என முக்கிய கட்சிகள் அனைத்துமே ஆர்வமாக உள்ளன.
அதிமுகவில் வாய்ப்பு யாருக்கு?
அதிமுக கூட்டணி கட்சிகளும் சேலத்தில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், சேலம் தொகுதியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது என அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
அதிமுக சார்பில் முதல்வரின் மகன் அல்லது அவரது உறவினர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றாலும், முதல்வரின் கணக்கு வேறு விதமாக இருப்பதாக கூறப்படுகிறது. உறவினர் அல்லாத ஒருவரை முதல்வர் நிறுத்துவார் எனவும் பேசப்படுகிறது. புதியவர்களுக்கு சீட் என்றால் எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ஆர்.ஆர்.சேகரன், முன்னாள் கவுன்சிலர் கே.ஆர்.சரவணன், ஒப்பந்ததாரர் சண்முகம் ஆகியோரில் ஒருவர் அல்லது முதல்வரிடம் விசுவாசமாக உள்ள தற்போதைய் எம்பி பன்னீர்செல்வத்துக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படி என்றாலும் முதல்வர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட பலரும் காய் நகர்த்தி வருவதால், சேலம் அதிமுகவில் பரபரப்பு தற்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் போட்டியா?
திமுக கூட்டணியில் சேலம் தொகுதி நிச்சயமாக தங்களுக்கு கிடைக்கும் என காங்கிரஸார் நம்புகின்றனர். எனவே, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தற்போதைய செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் போட்டியிட தயாராகி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனிடையே, அதிமுக அல்லது திமுக கூட்டணி என எதில் இணைந்தாலும், தேமுதிக நிச்சயம் சேலம் தொகுதியை கேட்கும் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். அவ்வாறு சேலம் கிடைக்கும் பட்சத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் மோகன்ராஜ், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
அமமுக-விலும் போட்டி
முதல் முறையாக மக்களவை பொதுத்தேர்தல் களத்தை சந்திக்கப் போகும் அமமுக சார்பில் சேலத்தில் புறநகர் மாவட்ட செயலாளர்கள் எஸ்.கே.செல்வம், எஸ்.சி.வெங்கடாசலம், மாதேஸ்வரன் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேர்தலில் வெற்றி தோல்வி யாருக்கு என்பதை விட, யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்பதே சேலத்தில் இப்போது பரபரப்பான பேச்சாக உள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago