சந்தியாவின் மகள் இந்தியாவை ஆள்வார் என அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் நம்பிக்கை தெரிவித்தார். மதுரை அதிமுக வேட்பாளர் ஆர். கோபாலகிருஷ்ணனை ஆதரித்து அவர் திங்கள்கிழமை கோ.புதூரில் பேசியது:
இது இந்தியாவுக்கான தேர்தல். ஆனால் தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெறுவதுபோல் நினைத்துக்கொண்டு அதிமுக அரசு மீது அம்புகளை வீசி, பேசி வருகிறார் மு.க.ஸ்டாலின். வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்.
ஸ்டாலின் எதையும் அறியாதவர். ஒரு பிரதான கட்சியின் முக்கிய தலைவராக இருக்கிறோமே என்பதை உணர்ந்து வார்த்தைகளை அளந்து பேசத் தெரியவில்லை.
அவரது கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். அதற்கு பதில் சொல்லாமல், கருணாநிதி யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என திமுகவினர் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் பதவியைக்கூட பிடிக்க முடியாமல் விழுந்து கிடக்கும் ஆளால் எப்படி பிரதமர் வேட்பாளரை அடையாளப்படுத்த முடியும். அவர்களின் பேச்சு வேடிக்கையாக உள்ளது.
இந்தியா இப்போது பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. இந்திய வீரரின் தலையை துண்டிக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு வந்துவிட்டது. இந்திய எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தில் தங்கள் நாட்டுக் கொடியை நட்டு வைக்கும் தைரியம் சீனாவுக்கு வந்துவிட்டது. கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொள்ளும் தைரியம் இலங்கைக்கு வந்துவிட்டது. இதுதவிர நாட்டின் பணவீக்கம் சரிந்துவிட்டது. கோபுரப் பெருமையாக இருந்த இந்தியாவின் மதிப்பு இன்று குட்டிச்சுவராக சரிந்துவிட்டது.
இவற்றிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க இப்போது மூன்றாவது சுதந்திரப் போருக்கு நாம் தயாராக வேண்டும். நாட்டை காவு கொடுத்த காங்கிரஸை விரட்டியடிக்க வேண்டும். அதோடு கூட்டணி சேர்ந்திருந்த திமுக இப்போது அதனை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறது. நிரந்தரமாக இல்லை என்று கூற முடியுமா? நாளை மீண்டும் கைகோர்க்க அவர்கள் தயாராக இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு தப்பித்தவறிகூட வாக்களித்து விடாதீர்கள்.
அதேபோல் பாஜகவும், அவர்களை நம்பியுள்ள சில கட்சிகளும் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றன. அவர்கள் வெற்றி பெற்றால் தேசம் துண்டாகிவிடும். சமூக நல்லிணக்கம் சிதறிவிடும். இதுதான் குஜராத் மக்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம். எனவே காங்கிரஸ், பாஜக என தேசியக் கட்சிகளுக்கு விடை கொடுங்கள். தற்போது திராவிட இயக்கத்துக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தியாவின் மகள் (ஜெயலலிதா) இந்தியாவை ஆள்வார். எனவே அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
அவருடன் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்பட பலர் சென்றனர். அதன்பின் பிபிகுளம், செல்லூர் 50 அடி ரோடு, இஸ்மாயில்புரம், ராம் தியேட்டர், ஜீவாநகர், காஜியார் தெரு, ஆரப்பாளையம், மஹால், பெத்தானியாபுரம், ஆனையூர் ஆகிய இடங்களில் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார். இந்த இடங்கள் அனைத்திலும் ஞாயிற்றுக்கிழமை திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
இந்தியா
33 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago