சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பணி நியமனத்தில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பணி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்ட பின்னர், பணி நியமனத்தை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
இந்த சூழலில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. அதேபோல, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டு, விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்து, பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், டெட் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பள்ளிக்கல்வித் துறை வரையறுத்துள்ள கல்வித் தகுதி அடிப்படையில், ஜூன் 1-ம் தேதி வரை காலியாக உள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள், தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகளிடம் ஜூலை 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை மாவட்டக் கல்வி அதிகாரிகள் தொகுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அனுப்பிவைக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு டெட் முதல்தாள் தேர்விலும், பட்டதாரி ஆசிரியருக்கு டெட் 2-ம் தாள் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தால், முன்னுரிமைபடி பரிசீலிக்க வேண்டும். இடைநிலை, பட்டதாரி பணிக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிந்து வருபவர்கள் அல்லது டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பங்கேற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் அல்லது பள்ளி அருகே வசிப்பவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.
தகுதிபெறும் பட்டதாரிகளை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வைத்து, அவர்களின் திறனறிந்த பின்னர், பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். மேலும், ‘இந்தப் பணியிடம் தற்காலிகமானது. பணி மற்றும் நடத்தையில் திருப்தி இல்லையெனில், உடனே விடுவிக்கப்படுவார்கள்’ என்பதை பட்டதாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
37 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago