மத்திய - மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றையும் நலத்திட்டங்களையும் பெறுவதற்குப் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் அவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் அனைத்துப் பழங்குடிகளும் சந்தித்துவரும் ஒரு அவலம் சாதிச் சான்றிதழ் பெறுவது. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதால், அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, வனஉரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை, பழங்குடியினர் நலவாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் போன்றவற்றைப் பெற முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
குடியிருக்க வீடே இல்லாத பழங்குடியினரிடம் 1950-ம் ஆண்டுக்கு முந்தைய நிலப் பத்திரம் கேட்பதும், 100 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் முன்னோர்கள் செய்த தொழிலைத் தற்போதும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எவ்விதத்திலும் நியாயம் இல்லை. தந்தைக்கு சாதிச் சான்றிதழ் இருந்தால் அவரின் பிள்ளைகளுக்கும், உறவினர் ஒருவருக்கு சாதிச் சான்றிதழ் இருந்தால் அவரின் மற்ற உறவினர்களுக்கும் அதே கோப்பின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளன.
இந்த நடைமுறை தமிழ்நாட்டில் பல வருவாய்க் கோட்டங்களில் பின்பற்றப்படுவதில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்களின் காரணமாகப் பழங்குடியினரின் தோற்றம், உணவு முறை, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பழங்குடியினரின் இடப்பெயர்வுகள் காரணமாக அவர்களின் பண்பாட்டுக் கூறுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைப் பல்வேறு மானிடவியல் ஆய்வாளர்கள் தங்கள் கள ஆய்வின் மூலம் உறுதிசெய்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் வாழ்க்கை முறை குறித்துக் கேள்வியெழுப்புவதும், வருவாய்க் கோட்டாட்சியர்கள் பலரும் இயந்திரத்தனமாகச் செயல்படுவதும் அரசமைப்புக்கு முரணானது.
பழங்குடியினரின் இனச்சான்று என்பது அவர்களின் அடையாளம் ஆகும். நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்பும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் பரிதவிப்பது, அதனால் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை மறுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒரே நடைமுறையைப் பின்பற்றும் வகையில், அரசாணை வெளியிடப்பட வேண்டும். பழங்குடியினரின் நலன்களை உறுதிப்படுத்துவதுடன், அவர்களுக்கு அரசமைப்பு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெறுகிறார்களா என்பதையும் பழங்குடியினர் நலத் துறையும் அரசும் உறுதிசெய்திட வேண்டும்.
> இது, ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
முக்கிய செய்திகள்
இந்தியா
20 secs ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
45 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago