சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் 3 இடங்களையும் மாணவர்களே பிடித்தனர்

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. 1016 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அகிலஇந்திய அளவில் முதல் 3 இடங்களையும் மாணவர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 விதமானமத்திய அரசின் உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டுசிவில் சர்வீஸ் பதவிகளில் 1,143 காலியிடங்களை நிரப்புவதற்காக மே 28-ம் தேதி முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை அகில இந்திய அளவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.

முதல்நிலைத்தேர்வு முடிவுகள் ஜுன் 12-ம் தேதி வெளியிடப்பட்டன. முதன்மைத்தேர்வுக்கு 14,624 பேர் தேர்வு செய்யப்பட்டனர். செப்டம்பரில் நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியாயின.

இதன்படி மெயின் தேர்வில் 2,844 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 134 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு ஆளுமைத்திறன் தேர்வு ஜனவரி 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், முதன்மைத் தேர்வு மதிப்பெண் மற்றும் ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட வெவ்வேறு பணிகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட பட்டியலை யுபிஎஸ்சி நேற்று பிற்பகல் இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 1,016 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் மாணவர் ஆதித்யா ஸ்ரீவத்சவா முதலிடத்தையும் மாணவர் அனிமேஷ் பிரதான் 2-ம் இடத்தையும், மாணவர் டோனூரு அனன்யா3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு முதல் 3 இடங்களையும் ஆண்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி 347 பேர் பொதுப்போட்டியின் கீழும், 116 பேர்பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் கீழும், 303 பேர் ஓபிசி பிரிவின் கீழும், 165 பேர் எஸ்சி பிரிவின் கீழும், 86 பேர் எஸ்டி பிரிவின் கீழும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 180 பேர் ஐஏஎஸ் பதவிக்கும், 37 பேர் ஐஎப்எஸ் பதவிக்கும், 200 பேர் ஐபிஎஸ் பதவிக்கும் 613 பேர் குருப்-ஏ பதவிகளுக்கும், 113 பேர் குருப்-பி பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முதலிடம் பெற்ற ஆதித்யா ஸ்ரீவத்ஸவா கான்பூர் ஐஐடியில் பிடெக் பட்டம் பெற்றவர். அதேபோல் 2-ம் இடத்தை பிடித்துள்ள அனிமேஷ் பிரதான் ரூர்கேலா என்ஐடி-யில் பிடெக் படித்துள்ளார். 3-ம் இடம்பெற்ற டோனூரு அனன்யா டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ புவியியல் (ஆனர்ஸ்) பட்டம் பெற்றவர்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாட்டில் 42 மாணவர்கள் வெற்றிபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அகில இந்திய அளவில் 41-வது இடத்தை பிடித்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்ராம், தமிழக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 79-வது இடத்தை பிடித்துள்ள தமிழக டாக்டர் எஸ்.பிரசாந்த் தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து 42 மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

தமிழக மாணவர்கள் 42 பேருக்கு முதல்வர் வாழ்த்து

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ள தமிழக மாணவர்கள் 42 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தேசத்துக்காகப் பணியாற்ற அடியெடுத்து வைக்கும் அவர்களின் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன். அவர்கள் செல்லும் இடமெல்லாம் நல்மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார்களாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

51 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்