தி.மலை ஏ.டி.எம் கொள்ளை | சுங்கச்சாவடியை கடக்காமல் ஆந்திராவுக்கு தப்பிய கும்பல்

By செய்திப்பிரிவு

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 4 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்த ஹரியானா மாநில கும்பல் ராணிப் பேட்டை மாவட்டம் வழியாக சித்தூர் சென்றது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட 3 வங்கி ஏ.டி.எம்., ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் இயந்திரங்களை காஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் நேற்று முன்தினம் காலை தெரியவந்தது. இது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் திருவண்ணாமலையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் 5 மாவட்ட எஸ்பிக்கள் அடங்கிய குழுவினர் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மங்கி குல்லா அணிந்து...: இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கொள்ளை கும்பல் ஏ.டி.எம் மையங்களை முன்கூட்டியே நோட்ட மிட்ட பிறகே திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டாடா சுமோ கோல்ட் வாகனத்தில் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்த 6 பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை 1.19 மணிக்கு முதல் கொள்ளையை தொடங்கியுள்ளனர். பின்னர், அவர்கள் அவளூர்பேட்டை ரோடு, கலசப்பாக்கம், போளூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்துள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் ஷட்டரை இறக்கிவிட்டு காஸ் வெல்டிங் மூலம் 20 நிமிடங்களில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

கடைசியாக நேற்று முன்தினம் அதிகாலை 4.20 மணிக்கு போளூரில் கொள்ளையை முடித்துவிட்டு புறப்பட்டுள்ளனர்.

சுங்கச்சாவடியை தவிர்த்து...: 4 மணி நேரத்தில் 4 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை யடித்தவர்கள் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர். வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளது.

இரண்டு நாளில் முக்கிய திருப்பம்: இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டுள்ள தனிப்படையினர் சுங்கச்சாவடி இல்லாத சாலைகளில் கொள்ளை யர்களின் டாடா சுமோ கடந்து சென்றுள்ளதா? என விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் ஆந்திர மாநில பதிவெண் மட்டும் இதுவரை உறுதியாகவில்லை. இரண்டு நாளில் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் இருக்கும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்