சென்னை சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் | உறவினர்கள் 8 பேருக்கு வாழ்நாள் சிறை - 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியின் உறவினர்கள் 8 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமி தனக்கு நடந்த தொடர் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் கொடுத்தார். இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்ற கஸ்தூரி, மாரி, பாஷா, முத்துபாண்டி, மீனா, ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வர ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், மாரீஸ்வரன், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் என்ற அஜய், கண்ணன் ஆகிய 26 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மாரி, பாஷா, முத்துபாண்டி, மீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். விசாரணை காலத்தில் மாரீஸ்வரன் உயிரிழந்துவிட்டார்.

மற்ற 21 பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பல வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கில் அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் புகழேந்தி, 7 பெண்கள் உட்பட 21 பேரும் குற்றவாளிகள்’’ என்று கடந்த செப்.15-ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தண்டனை விவரங்களை நீதிபதி நேற்று அறிவித்தார். இதற்காக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 21 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி எம்.ராஜலட்சுமி பிறப்பித்த தீர்ப்பில் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களான மதன்குமார் (40), சாயிதாபானு (24), சந்தியா (29), செல்வி (52), கார்த்திக் (31), மகேஸ்வரி (33), வனிதா (37), விஜயா (47) ஆகிய 8 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. காவல் ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட 13 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 21 பேருக்கும் மொத்தம் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், காவல் ஆய்வாளர் புகழேந்திக்கு மட்டும் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்த அபராதத் தொகையும், தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சமும் சேர்த்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

துணிச்சலான பெண் ஆய்வாளர்

உறவினர்களே தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கடந்த 2020 நவம்பர் மாதம் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணையை தொடங்கினார் காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி.

சிறுமியை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர் கும்பலை சுற்றிவளைத்தார். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், சிறுமியின் உறவினர்களே அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், தரகர்களிடம் கைமாற்றி, தினமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

இவர்களை காவலில் எடுத்து விசாரித்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும், தொழிலதிபருமான ராஜேந்திரன் என்பவர், சிறுமியின் உறவினர்களுக்கு அதிக அளவில் பணம்கொடுத்துவிட்டு, சிறுமியை முழுமையாக தன் கட்டுபாட்டிலேயே வைத்திருந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன் பிறகு, காவல்ஆய்வாளர், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், உணவுப்பொருள் வழங்கல் அலுவலர், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். ராஜேந்திரனின் அலுவலகத்தையும் இதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரியவந்தது. காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி துணிச்சலாக செயல்பட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 பிப்ரவரி மாதம் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம், கைதானவர்கள் அளித்தவாக்குமூலம், சாட்சியங்களின் வாக்குமூலம் என 600 பக்க குற்றப்பத்திரிகையில் தகுந்த ஆதாரங்கள் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன. அரசு தரப்பில் 96 பேர் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்