கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு | அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் உட்பட 3 பேரிடம் விசாரணை

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முக்கியக் குற்றவாளியான உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜ் குறித்து, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் உள்பட மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை முதலில் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். சில மாதங்களுக்கு முன்னர், இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தனிப்படை போலீஸார், இவ்வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டு, பிணையில் உள்ள நபர்கள், அவர்களுடன் தொடர்புடைய நபர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். உயிரிழந்த கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றினார். அதன் பின்னர், ஒன்றரை வருடங்கள் கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியுள்ளார்.

இதனால் உயிரிழந்த கனகராஜ் தொடர்பான விவரங்களை கேட்டுப் பெற, முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஆறுக்குட்டியின் மகன் அசோக், சகோதரர் மகன் பாலாஜி, தனி உதவியாளர் நாராயணன் ஆகிய மூன்று பேரிடம் போலீஸார் இன்று ( சனிக்கிழமை) விசாரணை நடத்தினர். கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து, சுமார் 4 மணி நேரம் மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கனகராஜ் எவ்வாறு ஆறுக்குட்டியிடம் வேலைக்கு சேர்ந்தார், பணியின் போது கனகராஜின் நடவடிக்கை எவ்வாறு இருந்தது, அவருடன் சாதாரண தொடர்பில் இருந்தவர்கள் யார், அவருடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் யார், வெளி நபர்கள் யாராவது அவரை அடிக்கடி சந்தித்தனரா என்பது போன்ற தகவல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

தமிழகம்

49 mins ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்