திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆபத்தாக மாறிய பக்கிரிப்பாளை யம் நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஐஜி முத்துசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக். 15-ம் தேதி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு சென்று பெங்களூரு திரும்பிக்கொண் டிருந்த காரும், லாரியும் பக்கிரிப்பாளையம் பகுதியில் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற டாடா சுமோவும், அரசுப் பேருந்தும் கடந்த திங்கட் கிழமை இரவு மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பகுதியில் மட்டும் கடந்த 5 மாதங்களில் நடைபெற்ற விபத்துகளில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வேலூர் சரகத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் சுமார் 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைக் காட்டிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் விபத்துகளால் சற்று அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட காவல் நிர்வாகம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதி காவல்துறைக்கு சவலாக மாறியுள்ளது.
இதையடுத்து, திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வரை செல்லும் நெடுஞ் சாலையில் விபத்துகளை தடுப்பது குறித்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் இந்திய தேசிய நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், வட்டார போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை சுமார் 54 கி.மீ தொலைவுக்கு நடைபெற்ற ஆய்வின்போது அய்யம்பாளையம், பாளையம்பட்டு, பெரிய கோளாம்பாடி, பெரியகுளம், பாய்ச்சல், இறையூர், கொட்டாங்குளம், இருமாங்குளம் உள்ளிட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் கள ஆய்வும் நடத்தியுள்ளனர். ஆய்வின் முடிவுகள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் விவாதித்து குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூன்றடுக்கு வேகத்தடை... இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கூறும்போது, ‘‘பக்கிரிப்பாளையம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ‘எஸ்’ வடிவில் உள்ளது. 20 அடி அகலமுள்ள சாலையாக உள்ளது. சாலை நடுவில் தடுப்புச்சுவர் எதுவும் இல்லை. சாலை வளைவுகளில் வாகனங்கள் முந்திச்செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
செங்கம் நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க கிராமங்களில் இருந்து நெடுஞ்சாலையுடன் இணையும் பகுதியில் மூன்றடுக்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட உள்ளன.
நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதுபோன்ற இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியின் இரண்டு பக்கமும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்படும். பக்கிரிப்பாளையம் சாலை திருப்பங்களில் இரவில் ஒளிரும் பிளிங்கர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் சாலையின் நடுவில் ஒரே வெள்ளைக்கோடு மட்டும் உள்ளது. அதற்கு பதிலாக, பூனைக் கண் சிகப்பு நிற அடையாள கோடு வரைப்படும்.
மேலும், சாலை திருப்பங்களில் DELINATOR எனப்படும் சிகப்பு கூம்பு சாலையில் பொருத்தப்படும். இரவு நேரங்களில் அதன் மீது மோதாமல் இருக்குமாறு வாகனங்கள் ஒழுங்காக செல்லும். ரப்பரால் ஆன அந்த கூம்பு மீது வாகனங்கள் தவறுதலாக மோதி னாலும் ஒன்றும் ஆகாது. இந்த கூம்புகள் வாகன ஓட்டுநருக்கு இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்கும்.
மேலும், சாலை வளைவுகளில் வாகன ஓட்டிகளின் பார்வைகளை மறைக்கும் விதமாக இருக்கும் விளம்பர பலகைகள், மரக்கிளைகளை அகற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கிருஷ் ணகிரி மாவட்ட எல்லையில் புதிய சோதனைச்சாவடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
40 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago