தேர்வைப் பார்த்தோ தோல்வியைப் பார்த்தோ ஒருநாளும் நாம் பயப்படக் கூடாது என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்வின் மீதான பயத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வர் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள், மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். நடிகர் சூர்யா வீடியோ வடிவில் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மாணவர்கள் தற்கொலை குறித்து ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''நேற்றிரவு என் மகன்கள் ஒருத்தரை ஒருத்தர் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக இருந்தேன். 'ஏன் டாடி சோகமா இருக்கீங்க' என்று இளைய மகன் கேட்டான். எனக்குள் நானே கேட்டேன். நான் ஏன் சோகமாக இருக்கிறேன். நீட் தேர்வை ஒட்டி பிஞ்சுப்பூக்களின் தற்கொலையும் கவிஞன் பிரான்சிஸ் கிருபாவின் மரணமும் என்னை ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவு செய்தவண்ணம் இருக்கிறது.
பொதுவாக மாணவர்களுக்கு என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல விழைகிறேன். என் முதல் படம் தோல்வியுற்றபோது தோல்வி எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் எட்டாண்டுகள் நான் உதவி இயக்குநராக இருந்தபோது ஒரு நிமிடமும் கற்றுக் கொள்ளாத மிகச்சிறந்த பாடம். புரியாத பாடங்களை வாத்தியார் எழுதிப் பாருங்கள் புரியும் என்று சொல்வார்களே, அதேபோன்று எனக்குப் பிடித்த உலக சினிமாக்களின் திரைக்கதையை எழுதிப் பார்ப்பேன். காட்சிவாரியாக ஒன்லைனராக எழுதி வைத்து திரைக்கதைன்னா இப்படியா என்று மனதில் பதியவைத்துக் கொண்டேன். நான்காண்டுகள் முழுக்க முழுக்க அடுத்து இயக்கப்போகும் படத்திற்காக என்னைத் தயார் செய்துகொண்டேன். எங்கெல்லாம் தவறு நிகழ்கிறது அதை நான் எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்று குறிப்பு எழுதி வைத்துக்கொண்டேன்.
எங்கெல்லாம் நான் எப்படிச் செயல்படவேண்டும் என்று ஒத்திகை பார்த்தேன். 4 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு 'வெயில்' படம் இயக்க வாய்ப்பு வந்தபோது நெருங்கிய நண்பர்கள், வசந்தபாலன் என்பது தோல்வியுற்ற பெயர். ஆகவே உங்களின் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்றனர். நான் உறுதியாக மறுத்துவிட்டேன். முதல் படத்தில் தோல்வியைத் தழுவிய வசந்தபாலன்தான் இரண்டாவது படத்தில் வென்றுவிட்டான் என்பது உலகிற்குத் தெரியவேண்டும். அதனால் யார் சொன்னாலும் நான் என் பெயரை மாற்றவே மாட்டேன் என்று உறுதிபடக் கூறினேன்.
தேர்வைப் பார்த்தோ தோல்வியைப் பார்த்தோ ஒருநாளும் நாம் பயப்படக் கூடாது. அவனே நம் வாழ்வின் மிகச் சிறந்த ஆசான். அவனே நம்மை வெற்றியை நோக்கி வழிநடத்தும் மிகச்சிறந்த நண்பன். தற்கொலை என்பது உன்னை நீ தண்டிப்பது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு தேர்வு எழுதப்போகும் லட்சக்கணக்கான மாணவர்களையும் சமூகத்தையும் சேர்த்து தோல்வி பயத்தில் தள்ளுகிறாய். இந்த வாழ்வைப் படிக்கத்தான் இந்த பூமிப்பந்தில் பிறந்தாய். உனக்கு வழங்கப்பட்ட வாழ்வு மகத்தானது. அதில் அவ்வப்போது ஏற்படும் சிறு இடும்பைப் பற்றி அதாவது சிறு துன்பம் பற்றியும் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என வள்ளுவர் தாத்தா என்ன சொல்கிறார் என்றால்,
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்''.
இவ்வாறு வசந்தபாலன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
இந்தியா
27 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
3 hours ago