'மயக்கம் என்ன' படத்தில் வரும் நாயகன் கார்த்திக் கதாபாத்திரத்தைப் போல நானும், என் கணவர் யாமினி கதாபாத்திரத்தைப் போலவும் நிஜ வாழ்க்கையில் இருப்பதாக நடிகை ரிச்சா பகிர்ந்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று வெளியான திரைப்படம் 'மயக்கம் என்ன'. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா ஆகியோர் நடித்திருந்தனர். புகைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கணவனை, அவன் செய்யும் தவறுகளைப் பொறுத்து, ஆதரித்து, வெற்றிபெறச் செய்யும் ஒரு பெண்ணின் கதையே இது. இதில் தனுஷ் நடித்திருந்த கார்த்திக் மற்றும் ரிச்சா நடித்திருந்த யாமினி கதாபாத்திரங்கள் இன்று வரை செல்வராகவன் ரசிகர்களிடையே பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்தப் படம் வெளியாகி 9 வருடங்கள் ஆனதை முன்னிட்டு நாயகி ரிச்சா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
"வாவ், 'மயக்கம் என்ன' வெளியாகி அதற்குள் 9 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நம்பமுடியவில்லை. அந்தக் கதையிலிருந்து என் நிஜ வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டைக் கொண்டுவிட்டேன். எனது திரை வாழ்க்கையை விட்டுவிட்டு எனது மற்ற ஆர்வங்களைத் தேட மொத்தமாக என் துறையை மாற்றிக்கொண்டேன். எந்த வருத்தங்களும் இல்லை. ஏன், என் வாழ்வில் இதுவரை எந்த வருத்தங்களும் இருந்ததே இல்லை.
நான் நடிகையாக இருக்கும் போதுதான் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்ட் மேனேஜ்மென்ட் துறையின் மீது ஈர்க்கப்பட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? பிரபலமான திரை நட்சத்திரமாக இருப்பதை விட ஒருவருக்கு மற்ற கனவுகள் இருக்கும் சாத்தியமுள்ளது. நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம்.
இந்தத் துறையில் நான் வளரும் போதுதான் எனது வாழ்நாள் துணையை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தேன். திரைத்துறையில் நுழைய வேண்டும் என்பது நல்ல முடிவுதான். ஆனால், அதை விட்டுவிட்டு எனது உண்மையான ஆர்வத்தைப் பின்தொடர வேண்டும் என்று எடுத்தது அதைவிடச் சிறந்த முடிவு.
நம் வாழ்க்கையில் என்றுமே நமக்கென விருப்பங்கள் இருக்கும். துணிந்து செயல்படுங்கள். பரந்த சிந்தனையோடு இருங்கள். உங்கள் முடிவுகள் கற்களில் பொறிக்கப்பட்டவை அல்ல, நீங்கள் வளர வளர உங்கள் கனவுகளும், லட்சியங்களும் வளரும். 24 வயது ரிச்சாவை விட 34 வயது ரிச்சாவின் ஆர்வமும், வாழ்க்கை முறையும் வித்தியாசமானது. நான் எனது வாழ்க்கையை நேசிக்கிறேன்.
எனது திரைப்படங்களைப் பார்த்ததற்கு, என் நடிப்பைப் பாராட்டியதற்கு, நான் துறையிலிருந்து விலகிய பிறகும் இவ்வளவு நாட்களாக என்னை ஆதரிப்பதற்கு, கொண்டாடுவதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லையென்றால் குறுகிய காலத்தில் அப்படி ஒரு வெற்றிகரமான திரை வாழ்க்கை அமைந்திருக்காது.
'மயக்கம் என்ன' திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும், என் நிஜ வாழ்க்கையில் நான்தான் கார்த்திக், என் கணவர் ஜோ தான் யாமினி. என்னவாக இருந்தாலும் அவர் என்னை ஆதரித்திருந்திருக்கிறார். திருமணம் ஆகி ஒரு வருடமே ஆனாலும் நாங்கள் ஒன்றாக இருப்பது 4 வருடங்களாக. இதுபோன்ற ஒரு துணைதான் ஒருவருக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ரிச்சா பகிர்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago