கே.ஜே.ஜேசுதாஸ்,  சிவாஜிக்குப் பாடிய ‘மலரே... குறிஞ்சி மலரே...’ ; 45 ஆண்டுகளாகியும் இன்னும் மணக்குது ‘டாக்டர் சிவா’ பாட்டு! 

By வி. ராம்ஜி

1975ம் ஆண்டு, எம்ஜிஆரும் நடித்துக்கொண்டிருந்தார். சிவாஜி நடித்த படங்கள் நிறையவே வந்துகொண்டிருந்தன. ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், கமல் முதலானோர் நடித்த படங்கள் வந்து கொண்டிருந்தன. அதே ஆண்டு, நவம்பர் 2ம் தேதி ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில், சிவாஜி, மஞ்சுளா நடித்த ‘டாக்டர் சிவா’ வெளியானது. இந்தப் படத்தில் சிவாஜிக்கு கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஒரே பாடல் இதுதான். ‘மலரே குறிஞ்சி மலரே’ பாடல் மலர்ந்து, 45 ஆண்டுகளாகிவிட்டன.

‘அன்பே ஆருயிரே’ சிவாஜி, மஞ்சுளா நடிப்பில் வெளியானது. சிவாஜி, மஞ்சுளா, ஜெயலலிதா, முத்துராமன் முதலானோர் நடித்திருந்தனர்.

ஜெயலலிதாவுடன் சிவாஜி நடித்த ‘பாட்டும் பரதமும்’ இந்த ஆண்டுதான் வெளியானது. மஞ்சுளாவுடன் சிவாஜி நடித்த ‘மன்னவன் வந்தானடி’ வெளியானது. இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில், பத்மப்ரியாவுடன் ‘வைர நெஞ்சம்’ படத்தில் சிவாஜி நடித்தார். அதுவும் இந்த வருடத்தில்தான் வெளியானது.

தவிர, ‘சினிமா பைத்தியம்’, ‘மனிதனும் தெய்வமாகலாம்’ முதலான படங்களில் கெளரவ வேடத்தில் நடித்தார் சிவாஜி.

’இதயக்கனி’, ’நாளை நமதே’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘பல்லாண்டு வாழ்க’ முதலான எம்ஜிஆரின் படங்கள் வெளியாகின. இதில் ‘இதயக்கனி’ தவிர்த்த மூன்று படங்களிலும் லதா நாயகியாக நடித்தார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் மஞ்சுளாவும் நடித்திருந்தார்.

கமல் ‘அந்தரங்கம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘ஆயிரத்தில் ஒருத்தி’, ‘பட்டிக்காட்டு ராஜா’, ’சினிமா பைத்தியம்’, ’தங்கத்திலே வைரம்’, தேன் சிந்துதே வானம்’, ‘பட்டாம்பூச்சி’, ‘மாலைசூடவா’, ’மேல்நாட்டு மருமகள்’ முதலான படங்களில் நடித்தார். இதில் பல படங்களில் சிவகுமாரும் கமலும் இணைந்து நடித்திருந்தார்கள்.

சிவாஜி நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். ’அவன் தான் மனிதன்’ படத்தையும் இவர்தான் இயக்கினார். ’சினிமா பைத்தியம்’ படத்தை முக்தா சீனிவாசன் இயக்கினார்.

’பாட்டும் பரதமும்’ படத்தை பி.மாதவன் இயக்கினார். ’மன்னவன் வந்தானடி’ படத்தையும் மாதவன் இயக்கினார். ’வைர நெஞ்சம்’ ஸ்ரீதர் இயக்கினார். ’டாக்டர் சிவா’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார்.

ஆக, அந்த வருடத்தில் சிவாஜி நடித்த பெரும்பான்மையான படங்களில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியிருந்தார். பல படங்களில் மஞ்சுளா நாயகியாக நடித்திருந்தார்.
இதில் ‘டாக்டர் சிவா’ சுமாராகத்தான் போனது. ஆனால் மெல்லிசை மன்னரின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ’காதல் சரித்திரத்தை எழுத வாருங்கள்’ என்ற டூயட் பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ’தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும் நான் தாஜா பண்ணினேன்’ என்ற பாடலும் வரவேற்பைப் பெற்றது. ’நல்லவன் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே...’ என்ற பாடலும் அருமையான பாடலாக அமைந்தது. ’கன்னங்கறுத்த குயில் நிறத்தவளே’ என்ற பாடலும் இந்தப் படத்தில் உண்டு.

ஆனாலும் மிக மிக முக்கியமான பாடல்... இரவுகளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்றைக்கும் கேட்கின்ற பாடல்... ‘டாக்டர் சிவா’ படத்தில் உண்டு. கவிஞர் வாலி எழுதிய அந்தப் பாடல் காலங்கள் கடந்தும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய அந்தப் பாடல்... ‘மலரே குறிஞ்சி மலரே’.

மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ

கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்

பால் மனம் ஒன்று
பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு
நல்வாழ்த்து கூறுங்களேன்

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

அன்றைய காலகட்டத்தில், மிக அழகான மெலடியாக, டூயட்டாக, காதலைக் கவிதையாகச் சொன்ன பாடலாக பல இளைஞர்களையும் யுவதிகளையும் தூங்கவிடாமல் செய்தது. புதுமணத் தம்பதியரைக் கூட இந்தப் பாடல் விட்டுவைக்கவில்லை. ஜேசுதாஸின் குரலில் அன்பும் வாஞ்சையும் வழிந்தோடும். ஜானகியின் குரலில் காதலும் பேரன்பும் ததும்பும்.

1975ம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில், சிவாஜி, மஞ்சுளா நடித்த ‘டாக்டர் சிவா’ வெளியானது. இந்தப் படத்தில் சிவாஜிக்கு கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஒரே பாடல் இதுதான். ‘மலரே குறிஞ்சி மலரே’ பாடல் மலர்ந்து, 45 ஆண்டுகளாகிவிட்டன.

ஆனாலும் இன்றைக்கும் இரவில் நம் செவிகளில் பூத்து, நாசிகளில் நறுமணம் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது ‘மலரே... குறிஞ்சிமலரே’ பாட்டு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்