திரையரங்கு உரிமையாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கைக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்குப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியுள்ளார் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா. அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள் வெளியீடு இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஆதரவு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.
இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி கொடுத்துள்ளார். அதில் இந்தியா முழுக்க உள்ள நடைமுறை எனவும், இதற்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
"க்யூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து வசூல் செய்யும் தொகை குறித்து திரையரங்க உரிமையாளருக்கு வைக்கும் கோரிக்கை
1. திரையரங்க உரிமையாளர்கள் சொந்தச் செலவிலேயே டிஜிட்டல் புரொஜக்டர்களை அமைத்துக் கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள்தான் செலுத்த வேண்டும்.
2. வி.பி.எஃப் கட்டணம் என்ற பெயரில் தயாரிப்பாளர்களிடம் / விநியோகஸ்தர்களிடம் எந்தத் தொகையும் பெறக்கூடாது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பல ஆயிரம் கோடி இங்கிருந்து செலுத்தப்பட்டுள்ளது.
3. மேலும் உலகம் முழுவதும் வி.பி.எஃப் கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகின்றன. ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் இந்தக் கொடுமை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
4. இதை ரத்து செய்வதன் மூலம் சிறிய படத் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 100 பிரதிகளுக்கு ரூபாய் 25 லட்சம், பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 500 பிரதிகளுக்கு ரூபாய் 1 கோடி 25 லட்சம், 1000 பிரதிகளுக்கு ரூபாய் 2 கோடி 50 லட்சம் வரை படத்தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் பல கோடி ரூபாய் இதன் மூலம் பயன் அடையலாம்
எனவே, வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் வி.பி.எஃப் தொகையைச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது என்ற கோரிக்கையினை வைக்கின்றோம்.
தேவைப்பட்டால் படத்தின் பிரதியை ஹார்ட் டிஸ்க்கில் கொடுத்து விடுகின்றோம். அதற்கான செலவு குறைந்தது ரூபாய் 500/- முதல் 1000/- வரை தான் ஆகும். அதனை நாங்கள் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் கலந்து பேசி ஏற்றுக் கொள்கின்றோம்”
இவ்வாறு தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
7 hours ago