'பாரசைட்' படம் ஆஸ்கர் விருதுக்குத் தகுதியானதா? - வெற்றிமாறன் பதில்

By செய்திப்பிரிவு

'பாரசைட்' திரைப்படம் ஆஸ்கர் விருது பெறத் தகுதியானது என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.

சிறந்த படம், சிறந்த சர்வதேசப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் என நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்று சினிமா ஆர்வலர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியது தென்கொரியப் படமான 'பாரசைட்'. 92 வருட ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பெற்ற முதல் அயல்மொழித் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது. பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த கரோனா ஊரடங்கில் தனியார் யூடியூப் இணையதளம் ஒன்று ஒருங்கிணைத்த கலந்துரையாடலில் பயிற்சியாளர் பாசு ஷங்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 'பாரசைட்' ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான படம்தானா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தப் பகுதி:

தினேஷ் கார்த்திக்: 'பாரசைட்' திரைப்படம் ஆஸ்கர் விருது பெறத் தகுதியானது என நினைக்கிறீர்களா?

வெற்றிமாறன்: 'பாரசைட்' திரைப்படம், முதலாளித்துவ வாழ்க்கை முறையை கேள்வி கேட்கிறது. அதனால் ஒரு சாதாரண மனிதன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதைக் காட்டுகிறது. படத்தின் பல இடங்களில் இந்த (ஏழை - பணக்காரன்) பிரிவினை தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும். வெள்ளத்தால் இந்த ஏழைக் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும், வீடிழந்து அனைவரும் ஒரு கால்பந்து மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அனைவரும் வலியில் இருப்பார்கள். ஆனால், அந்தப் பக்கம் பணக்காரக் குடும்பத்துப் பெண் மாலுக்குச் சென்று தனது மகனின் பிறந்த நாள் விழாவுக்கான பொருட்களை வாங்கிக் கொண்டிருப்பார். இதை அடுத்தடுத்துக் காட்டி இந்த வர்க்கப் பிரிவினையை நமக்கு உணர்த்தியிருப்பார்கள்.

எனவே இந்தப் படம் முதலாளித்துவத்தைக் கேள்வி கேட்கும் தன்மைதான் ஆஸ்கரில் இதற்குச் சாதகமாக இருந்தது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அமெரிக்காவில் இப்போது அவர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, அரசாங்கம் என அனைத்தையும் கேள்வி கேட்கிறார்கள். இந்தப் படம் அவர்களின் இந்த மனநிலையை நன்றாகப் பிரதிபலித்தது.

முதலாளித்துவத்துக்கு எதிராக இருக்கும் ஒரு மனநிலை, ஏமாற்றம், வலது சாரி அரசியல் பார்வையால், அரசாளும் முறையால் மக்கள் பாதிக்கப்படுவது என உலகம் முழுக்கவே இந்த நிலை இருந்து வருகிறது. இது 'பாரசைட்' படத்தில் பிரதிபலித்தது. இந்தப் படத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தார்மீக அடிப்படையில் யோசித்திருப்பார்கள்.

மேலும் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஆஸ்கர் என்பது ஒரு நல்ல படத்துக்கான அளவுகோல் கிடையாது. ஜனரஞ்சகமான, வணிகரீதியான படங்களில் ஒழுங்கான, உணர்வுபூர்வமான படங்களைத்தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

இவ்வாறு வெற்றிமாறன் பதில் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்