கடவுள் என்னிடம் சேவை செய்வதற்கான பணியை ஒப்படைத்துள்ளார்: லாரன்ஸ்

By செய்திப்பிரிவு

கடவுள் என்னிடம் சேவை செய்வதற்கான பணியை ஒப்படைத்துள்ளார் என்றும், மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடவுள்ளதாகவும் நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (ஏப்ரல் 10) நிலவரப்படி தமிழகத்தில் 911 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால், ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையில் கரோனா நிவாரணதி நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளதாகவும் லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார். மேலும், இந்த 3 கோடி ரூபாயில் யாருக்கு எவ்வளவு என்ன விவரத்தையும் வெளியிட்டு இருந்தார். லாரன்ஸின் இந்த தாராள மனதுக்கு சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.

இதனிடையே, தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"ஹாய் நண்பர்களே, ரசிகர்களே. நிவாரண நிதி அளித்ததற்காக என்னை வாழ்த்திய சினிமாத் துறை சார்ந்த நண்பர்கள் மற்றும் மீடியா நண்பர்கள், உங்கள் அனைவருக்கும், ஒரு மிகப்பெரிய நன்றி. உங்கள் அனைவரின் அன்பினாலும் நான் நிறைந்திருக்கிறேன். இந்த நிதியை வழங்கிய பிறகு ஃபைட்டர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. என்னுடைய பங்களிப்பை விரிவுபடுத்துமாறு என்னிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

பொதுமக்களிடமிருந்தும் கூட ஏராளமான கடிதங்களும், வீடியோக்களும் வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவை அனைத்துக்கும் நான் கொடுத்த 3 கோடி ரூபாய் போதுமானதாக இருக்காது. எனவே உண்மையில் என்னால் அதிகமான பங்களிப்பைத் தர இயலாது என்று நான் நினைத்ததால் எனக்கு கால் செய்பவர்களிடமும், கடிதம் அனுப்புவர்களிடமும் நான் பிஸியாக இருப்பதாகக் கூறிவிடுமாறு என்னுடைய உதவியாளர்களிடம் கூறினேன். நான் எனது அறைக்குச் சென்று இதைப் பற்றி யோசித்தேன். நான் செய்ததை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நேற்றிரவு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை.

பொதுமக்கள் அழும் வீடியோக்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்தன. அதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்த பிறகு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த உலகத்துக்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை. போகும்போதும் எதையும் கொண்டு செல்லவில்லை. தற்போது எல்லா கோயில்களும் மூடப்பட்டுள்ளன. கஷ்டப்படும் மக்களின் பசியில்தான் கடவுள் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை கடவுளிடம் நாம் கொடுப்பது பொதுமக்களுக்குச் சேராது. ஆனால், மக்களுக்கு நாம் கொடுத்தால் அது கடவுளிடம் சேரும்.

ஏனென்றால் எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கிறார். கடவுள் என்னை வீட்டில் உட்காரவைத்துவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னிடம் சேவை செய்வதற்கான பணியை ஒப்படைத்துள்ளார். நம் அனைவருக்கும் இது மிகவும் முக்கியமான காலகட்டம். இதுதான் சேவை செய்வதற்கான சரியான நேரம். எனவே மக்களுக்கும் அரசுக்கும் என்னால் ஆன சிறப்பான சேவையை செய்ய நான் முடிவு செய்துள்ளேன். நான் செய்யப்போவது பற்றி என்னுடைய ஆடிட்டர் மற்றும் நலம் விரும்பிகளிடம் கலந்தாலோசித்து உங்கள் அனைவரின் ஆசியுடனும் இன்று மாலை 5 மணிக்கு அதைப் பற்றி அறிவிப்பேன்".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

21 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்