முதல் பார்வை: மாலை நேரத்து மயக்கம் - வினோத தயக்கம்

By உதிரன்

செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம், செல்வராகவனின் ஆஸ்தான எடிட்டர் கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ண கோலா ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்ற இந்த காரணங்களே மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

'இரண்டாம் உலகம்' படத்தில் ஏற்பட்ட சறுக்கலை தன் எழுத்தால் 'மாலை நேரத்து மயக்கம்' மூலம் செல்வராகவன் நிமிர்ந்து நிற்பாரா? என்ற கேள்வியுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.

படம் எப்படி?

காதல், டேட்டிங் என்பதில் தவறில்லை என்று நினைக்கும் பெண்ணுக்கும், கல்யாணத்துக்குப் பிறகுதான் எல்லாம் என்று நினைக்கும் ஆணுக்கும் திருமணம் நடக்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள்? என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன? எந்த மாதிரி முடிவெடுக்கிறார்கள் என்பது மீதிக்கதை.

இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் என்ற எந்த பதற்றமும் இல்லாமல் நாயகன், நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்று ஒட்டுமொத்தக் குழுவையே புதியவர்களாக களம் இறக்கியதற்காக கீதாஞ்சலி செல்வராகவனைப் பாராட்டலாம்.

ஆனால், இயக்குநர் என்ற ஆளுமைக்கும், மேக்கிங் நேர்த்திக்கும் இது மட்டும் போதாது என்பதை கீதாஞ்சலி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

வழக்கமாக செல்வராகவன் படம் என்றாலே காட்சிகள், வசனங்களுக்கு கிளாப்ஸ் பறக்கும். மாலை நேரத்து மயக்கம் படத்தில் செல்வாவின் பங்களிப்பு பெரிதாக இருந்தாலும் கரவொலிகள் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தன.

செல்வராகவன் தன் படங்களில் கையாளும் வழக்கமான கதாபாத்திர வடிவமைப்பைதான் 'மாலை நேரத்து மயக்கம்' படத்திலும் செய்திருக்கிறார். ஆனால், அது இன்னும் அழுத்தமாகவும், ஆழமாகவும் இல்லை என்பதுதான் பிரச்சினை.

கட்டற்ற சுதந்திரத்துடன் அதே சமயம் எல்லையை உணர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நாயகியாக புதுமுகம் வாமிகா நடித்திருக்கிறார். ஆளுமை, ஈகோ, திமிர், அலட்சியம், அழுகை, சோகம், பிரிவு என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார் வாமிகா. கண் இமைக்காமல் நடிப்பதும், அட்டென்ஷனில் நின்றபடி டயலாக் பேசுவதும் நெருடலாகவும், உறுத்தலாகவும் இருக்கிறது.

நாயகிக்காக அடங்கி நின்று ஒரு கட்டத்தில் எதிர்த்து வெடிக்கும் நாயகனாக பாலகிருஷ்ண கோலா வந்து போயிருக்கிறார். அவர் முகத்தில் நடிப்பு வருவேனா என்று அடம்பிடிக்கிறது. டான்ஸிலும் சுமாரான ஸ்டெப்ஸ் போட்டு தர்ம சங்கடப்படுத்துகிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பில் பாலகிருஷ்ண கோலா நிறைய மெனக்கெட வேண்டிய தேவை இருக்கிறது.

வாமிகாவின் அம்மாவாக நடித்திருக்கும் கல்யாணி நட்ராஜன், பாலகிருஷ்ண கோலாவின் அப்பாவாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், பார்வதி நாயர் ஆகியோர் நாடகத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். அம்ரித்தின் இசை ஆரம்பக் காட்சிகள் தவிர்த்து படம் முழுக்க பொருந்திப் போகிறது. மாலை நேரத்து மயக்கம் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. அந்த டாஸ்மாக் பாடலுக்கு மட்டும் ருக்கேஷ் தயங்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.

தொடர்ந்து கண்காணித்தல், பின்தொடர்தல், கட்டுப்படுத்த நினைத்தல், பாலியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தல் என்று இல்லாமல் செல்வராகவன் கதையா? இது எல்லாம் இருக்கிறது. ஆனால், அது நம்பும்படியாகவோ, வலுவான பின்புலமோ இல்லாமல் தேமே என்று கடக்கிறது.

இன்னொருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கும்போது வாமிகாவின் கதாபாத்திரம் மொத்தமாக சிதைந்துவிடுகிறது.

'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், ஆண்கள் குறித்து அம்மா தன் மகளிடம் அப்படி இப்படிப் பேசுவதை ரசிகர்கள் முகச்சுளிப்பின் மூலம் தங்கள் சகிப்பின்மையை வெளிப்படுத்தினர்.

மொத்தத்தில் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தை வினோதமான தயக்கத்துடன் பார்க்கக் கடவது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்