கேரள வனத்தில் இருந்த புலி ஒன்று எல்லை தாண்டி தமிழக வனத்துறைக்குள் நுழைந்தால், அப்புலிக்கு மனிதர்களால் ஆபத்து நேர்ந்தால் அதுவே 'தும்பா'.
பெயின்டிங் கலையில் உச்சம் தொட நினைக்கும் தீனாவுக்கு டாப் ஸ்லிப்பில் ஓர் ஒப்பந்தப் பணி கிடைக்கிறது. தன் நண்பன் தர்ஷனுடன் இணைந்து சென்னையில் இருந்து டாப் ஸ்லிப் புறப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கு வைல்ட் லைஃப் புகைப்படங்களில் ஆர்வம். காட்டில் உலவும் புலியைப் படமெடுக்க டாப் ஸ்லிப் செல்கிறார். தமிழக வனத்துறைக்குள் நுழைந்த புலியை சட்டவிரோதமாக விற்பனை செய்ய டாப் ஸ்லில் வனத்துறை அதிகாரி சதித்திட்டம் தீட்டுகிறார். இந்த நால்வரைச் சுற்றியும் நகரும் கதையின் அடுத்தடுத்த நகர்வுகளே தும்பா.
குழந்தைகளைக் கவரும் நோக்கத்தில் ஜாலியாக ஒரு படம் எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் ஹரீஷ் ராம். அந்த முயற்சி ஓரளவுக்கே கைகூடியிருக்கிறது.
தீனா, தர்ஷன், கீர்த்தி பாண்டியன், பாலா, வனத்துறை அதிகாரி, விஜய் நெல்சன் என படத்தில் சில கதாபாத்திரங்கள்தான். ஆனால், கதாபாத்திரத் தேர்வில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார். 'கலக்கப்போவது யாரு' தீனா படம் முழுக்க காமெடி செய்கிறேன் என்று பேசுகிறார். ஆனால், சிரிப்பு வரவில்லை. அவரின் எனர்ஜி லெவலும் ரொம்பக் குறைவாகவே உள்ளது.
தர்ஷன் நாயக பிம்பத்துக்கான எந்த அம்சத்திலும் தனித்துத் தெரியவில்லை. மிக முக்கியமான காட்சிகளில் கூட தொண தொண பேச்சின் மூலம் எரிச்சலை வரவழைக்கிறார். போதாக்குறைக்கு அவரின் உடல் மொழியும், பேச்சும் உதயநிதியின் சாயலிலேயே இருப்பது பலவீனம். அவரை ஏன் 'லூஸு' ஹீரோவாகக் கட்டமைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
கீர்த்தி பாண்டியன் அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து போதுமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். 'கலக்கப்போவது யாரு' பாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஜெயம் ரவி சிறப்புத் தோற்றத்தில் வந்து சமுத்திரக்கனியின் சாயலில் மெசேஜ் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
நரேன் இளன் டாப் ஸ்லிப் மலைப்பகுதியையும், காடுகளின் கொள்ளை அழகையும் கண்களுக்குள் கடத்துகிறார். படத்தின் மொத்த பலமும் இளனின் ஒளிப்பதிவுதான். அனிருத், விவேக்- மெர்வின், சந்தோஷ் தயாநிதி என்று பல இசையமைப்பாளார்கள் படத்தில் பணியாற்றியுள்ளனர். இதில் அனிருத்தின் மெலடி மட்டும் ஈர்க்கிறது. சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை படத்துடன் பொருந்துகிறது.
புலியை வைத்து காட்சியை யோசித்த விதம், கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம் ரசனை. ஆனால், அதை சுவாரஸ்யமாகப் படமாக்குவதில் இயக்குநர் ஹரிஷ் ராம் திணறியுள்ளார். கீர்த்தி பாண்டியன் எப்படி தர்ஷன், தீனாவை நம்பிப் பணம் கொடுக்கிறார், அவர்களின் உண்மை முகம் தெரிந்த பிறகும் ஏன் அவர்களுடன் நட்பைத் தொடர்கிறார் என்ற கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை. வனத்துறை அதிகாரியின் அனுமதியை மீறி கீர்த்தி பாண்டியன் வனத்தில் நுழைவது நம்பும்படியாக இல்லை. இதனால் சில லாஜிக் சிக்கல்களும் எழுகின்றன. புலி மோதல் காட்சிகளும் செயற்கையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு செய்யும் உதவிகள், உயிர் சூழலுக்கு புலி ஏன் தேவை என்பதை விளக்கிய விதம், குட்டிப்புலி- தாய்ப்புலி சென்டிமென்ட், காடுகளை அழித்தால் நமக்கு இடம் இல்லை என்பதை உணர்த்திய விதத்தில் 'தும்பா'வை ஒரு முறை பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
இந்தியா
8 mins ago
விளையாட்டு
58 mins ago
தமிழகம்
27 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago