நவீன் செல்வம்
தமிழ்நாட்டை தேசியக் கட்சி மட்டும் ஆளக்கூடாது என 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் மயில்சாமி பேசினார்.
'கனா' படத்தைத் தொடர்ந்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் விஜய் டிவி ரியோ, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் இன்று (ஜூன் 3) நடைபெற்றது. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மயில்சாமி பேசும்போது, “இந்தப் படத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, நான் தெய்வமாய் வணங்கும் எம்ஜிஆர் பாடல் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. மற்றொன்று, அண்ணாமலையார் பெயர் கொண்ட சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தில் அனைவருமே இளைஞர்கள். எந்த இயக்குநரிடமும் நான் கதை கேட்கவே மாட்டேன். ஏனென்றால், எந்த இயக்குநரும் படம் ஓடக்கூடாது என்று கதை பண்ணமாட்டார்கள். என் வேலை, படம் நடிப்பது மட்டுமே. நான் நன்றாகவே நடிப்பேன், டபுள் மீனிங்கில் பேச மாட்டேன்.
நான் போகாத நாடே கிடையாது. எனக்கு இந்தி தெரியாது. தமிழ் மட்டும்தான் தெரியும். அதில்தான் பல குரலில் பேசி உலகம் முழுக்கப் பெயர் வாங்கியுள்ளேன். கேரளாவில் மிமிக்ரி செய்கிறவர்கள், அழகாகவும் உயரமாகவும் இருப்பார்கள். தமிழ்நாட்டில் அப்படி யாரும் மிமிக்ரியில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அந்தக் குறையைத் தீர்த்த சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப நன்றி.
ஒரு டிவி நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து உள்ளே நுழைந்து, பெயர் வாங்கி, அதே டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி, சினிமாவில் நுழைந்து ஹீரோவாகி, இப்போது படம் எடுத்து 100 பேருக்கு வேலை கொடுப்பதற்காக சிவகார்த்திகேயனை கையெடுத்துக் கும்பிடுகிறேன். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிபெறும்.
யூ ட்யூப், ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் எனக்குத் தெரியாது. டச் போன் பத்தியும் தெரியாது. ஆனால், அதை வைத்திருந்தால் பிரச்சினை என்று மட்டும் தெரியும். போன் என்பது பேசுவதற்கு மட்டும்தான், தேவையில்லாத தகவல்களைப் பரப்ப அல்ல. எந்த நோக்கத்தில் மனிதன் வாழ்ந்தாலும், நல்ல எண்ணத்துடன் ப்ளஸ்ஸாவே வாழ்ந்தால், அனைத்துமே ப்ளஸ்தான்.
எனக்கு மிகப்பெரிய சந்தோஷம், மோடி மீண்டும் பிரதமராக வந்தாலும், தமிழன் தமிழனாகவே இருந்ததுதான். தமிழன் கடைசி வரைக்கும் தமிழனாகவே இருக்கணும். தமிழ்நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளட்டும், தேசியக் கட்சி மட்டும் ஆளக்கூடாது. அப்படி ஆள்வதாக இருந்தால், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அப்படியென்றால் பெரிய சல்யூட் அடிப்பேன். வஞ்சகம் பண்ற யாருமே தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது.
இந்தியா முழுக்க மோடி வந்துவிட்டார் என்றாலும், தமிழ்நாட்டில் வரமுடியவில்லையே என்று சொல்கிறார்கள். அதற்காக நாம் பின்தங்கிப் போகவில்லை. உலகம் முழுக்கத் தமிழனை நினைக்காத நாடே கிடையாது. அதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். உலகத்திலேயே தமிழர்கள் திறமைசாலிகள்தான். உலகளவில் 8 அதிசயம் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை தஞ்சாவூர் பெரிய கோவில்தான் முதல் அதிசயம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
தமிழகம்
5 mins ago
சினிமா
11 mins ago
கருத்துப் பேழை
1 min ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago